உள்ளூர் செய்திகள் (District)

கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சீனிவாசன் நகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

Published On 2023-03-28 09:12 GMT   |   Update On 2023-03-28 09:12 GMT
  • கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
  • அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

47-வது வார்டு கவுன்சிலர் ஷபிஅமீர் அளித்த மனுவில், நெல்லை மேலப்பாளையத்தை அடுத்துள்ள கன்னிமார் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. அந்த கன்னிமார் குளத்தின் ஓடை பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் உள்ளிட்டால் நிரம்பிக் கிடக்கிறது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எம் சத்திரம் கிளை செயலாளர் கனகமணி அளித்த மனுவில், 38-வது வார்டுக்கு உட்பட்ட வி. எம் சத்திரம் பகுதி அப்துல் ரகுமான் முதலாளி நகர், வி.வி நகர், விஜய் நகர், காவிரி நகர், ஆதித்தனார் நகர், சரண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

38-வது வார்டில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சீனிவாசன் நகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைத்திட வேண்டும். ஹவுசிங் போர்டு 1-ல் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு இரும்பு வலை மூடி போட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News