உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வீடு கட்டித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி

Published On 2023-05-13 09:14 GMT   |   Update On 2023-05-13 09:14 GMT
  • கோவை சாய்பாபா காலனி ராஜஅண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
  • நிறுவன இயக்குனர் பணத்தை திருப்பிக் கொடுக்க 3 மாத காலம் கால அவகாசம் கேட்டார்.

கோவை,

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சத்தியவதி. இவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவை சாய்பாபா காலனி ராஜஅண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன இயக்குனர் வீடு கட்டி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்தோம். ஆனால் பணம் பெற்றுக் கொண்ட பின்பு அவர் நிலம் கிரயம் செய்து கொடுக்காமலும், வீடு கட்டி கொடுக்காமலும் இருந்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபின் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க 3 மாத காலம் கால அவகாசம் கேட்டார்.

ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும் அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே வீடு கட்டி தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவன இயக்குனர் விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News