ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
- ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
- பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன
மேலூர்
மதுரை அருகே உள்ள சக்குடியில் முப்புலி சாமி கோவில் உற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவ விழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட வாடிவாசலில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியவுடன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.
சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களின் பிடியில் சிக்காமல் நழுவியது. சிறப்பாக மாடுபிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் 10 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கும் முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், பூமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.