ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது
- மதுரையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை மேலப்பொன்ன கரம் 2-வது தெருவைச் சேர்ந்த சிவ பெருமாள் மகன் விக்னேஷ் (வயது24). இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நண்பர் ரஞ்சித்துடன் சென்னை சென்று கொண்டிருந்தார்.
முன் பதிவில்லாத பெட்டியில் ஏறிய இருவரும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கழிவறை அருகில் உள்ள கதவு அருகே நின்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் மதுரா கோர்ட்ஸ் பாலத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விக்னேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் திடீரென்று ரெயில் பெட்டியில் ஏறி விக்னேஷ் மற்றும் மற்றொரு பயணி யான மணிகண்டனிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உதவி ஆய்வாளர் சையது குலாம், காவலர்கள் பழனிக்குமார், பாலகிருஷ்ணன், சஞ்சய், செந்தில், செந்தில்குமார், திருமுருகன் ஆகியோர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்த போது தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தண்டவாள கிழக்கு பக்கமுள்ள ஆவின் பாலகம் அருகில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் என்ற குட்டி புலி (25) அஜய் குகன் (21), பரமேஸ்வரன் (29), சீனிவாசன் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் களும் பறிமுதல் செய்யப் பட்டது. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த பட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.