உள்ளூர் செய்திகள்

குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-01 07:18 GMT   |   Update On 2023-06-01 07:18 GMT
  • அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  • இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

இதையடுத்து மகா மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மதியம் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக அக்னி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் செய்தல், மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் காலை யாக பூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி யும், அதனை தொடர்ந்து விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ண சாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News