உள்ளூர் செய்திகள் (District)

ஆழியாறு அருகே காதலியிடம் வீடியோ காலில் பேசி விட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை

Published On 2023-05-12 09:17 GMT   |   Update On 2023-05-12 09:17 GMT
  • மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மோகன்பிரசாத் (வயது 26). ஐ.டி. ஊழியர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். மோகன் பிரசாத் தனது தந்தையிடம் காதலியை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் தங்கைக்கு திருமணம் முடிந்த உடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.இதன் காரணமாக மோகன் பிரசாத் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலியுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். காதலியை உடனடியாக திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இருந்த மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மோகன் பிரசாத் இறந்த தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மோகன் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News