உள்ளூர் செய்திகள்

கோவை வாலிபரிடம் ரூ.7.24 லட்சம் மோசடி

Published On 2023-05-20 09:06 GMT   |   Update On 2023-05-20 09:06 GMT
  • மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்றார்.
  • இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவரது செல்போனுக்கு டெலிகிராம் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர், லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் எனவும், அதற்கு ஆன்லைனில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழி–முறைகளை தெரிவித்தார்.

இதனையடுத்து அவருக்கு முதலில் 858 ரூபாய் கமிஷன் கிடைத்தது. பின்னர் அவர் ரூ.10,500 முதலீடு செய்தார்.

அதற்கு அவருக்கு கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.17,948-ம், 3-வதாக முதலீடு செய்த ரூ.38,686க்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.51,015 கிடைத்தது.

இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக அவர் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7.24 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை.

மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

மர்ம நபர் அதிக கமிஷன் கிடைக்கும் என நம்ப வைத்து மொத்தம் ரூ. 7.24 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டார். இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News