வேப்பூர் அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட குரங்குக்கு சிகிச்சை
- இந்த குரங்குகள் வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன.
- ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன. நடை பாதையில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களை விரட்டி பிடித்து பறித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்இந்நிலையில் ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதை அறிந்த சமூக ஆர்வலர் ஹில்சன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேப்பூர் கால்நடை டாக்டர் வசந்த் மற்றும் விருத்தாசலம் வனச்சரகத்தின் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து அந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது, குரங்கு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து மீண்டும் அந்த குரங்கை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த சமூக ஆர்வலர் ஹில்சனுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.