பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பரிதாப சாவு
- பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி புது மாப்பிள்ளை பரிதாப இறந்தார்.
- திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்
சாத்தூர் அருேக உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 23). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சங்கரேஸ்வரன் புதிதாக மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதில் தனது மனைவியுடன் நடுவக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சங்கரேஸ்வரன் சென்றார்.
நேற்று கணவன்-மனைவி இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். சாத்தூர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரேஸ்வரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஜான்சிராணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.