கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2022-23-ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஜூன் மாதத்திலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள், விதிமுறைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கல்லூரி மாணவர்க ளுக்கான போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் முதல்வர் ஒப்புதலுடன் விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் – (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 10.4.2023 - க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார். பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம், என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.