கோவையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
- ஸ்ரீராமுக்கும், 19 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது
- பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை,
குனியமுத்தூர் பிள்ளையார் கோவில் வீதி யை சேர்ந்தவர் ஸ்ரீராம் (22). கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீராமுக்கும், கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒரு வரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மகளிடம், அந்த வாலிபரிடம் பேசுவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கினர். இதையடுத்து இளம்பெண்ணும் வாலிபருடன் பேசுவதை தவிர்த்தார்.
நேற்று அந்த பெண் தான் வேலை பார்க்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அப்போது ஸ்ரீராம் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் அந்த பெண்ணிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் அந்த பெண் கழுத்து, காதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ஸ்ரீராமை தேடி வருகிறார்கள்.