'டுவிட்டர்' நிறுவனத்தில் இருந்து இந்தியர்கள் 200 பேர் பணிநீக்கம்
- டுவிட்டரை வாங்கிய உடனேயே அந்த நிறுவனத்தை எலன் மஸ்க் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
- ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய இழப்பீடு பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.
புதுடெல்லி :
'டுவிட்டர்' சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்க், அதில் அதிரடி பணி நீக்கங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில், டுவிட்டரின் இந்தியா பிரிவில் பணியாற்றி வந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்ஜினீயரிங், விற்பனை, சந்தையிடல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய இழப்பீடு பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.
இந்தியாவில் ஒட்டுமொத்த சந்தையிடல் மற்றும் தகவல் தொடர்பு துறை பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இது டுவிட்டர் பணியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கம் என்ற எலன் மஸ்கின் அதிரடியை அடுத்து, இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் மீது சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக 'புளூம்பெர்க்' ஏடு தெரிவித்துள்ளது.