செய்திகள் (Tamil News)

லேட்டாக காரை ஓட்டி வந்ததால் போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள்

Published On 2018-06-15 11:21 GMT   |   Update On 2018-06-15 11:21 GMT
கேரளாவில் போலீஸ் டிரைவரை தாக்கியதாக ஐபிஎஸ் அதிகாரியின் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் தலைவரான ஏடிஜிபி சுதேஷ் குமாரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் கவாஸ்கர். இவர் சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர்.

இந்நிலையில், நேற்று காலை அதிகாரி சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வாக்கிங் சென்றபோது, கார் வருவதற்கு தாமதம் ஆனது. இதனால் டிரைவர் கவாஸ்கரை அதிகாரியின் மகள் திட்டியுள்ளார். தன்னை திட்டவேண்டாம் என டிரைவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அதிகாரியின் மகள், டிரைவரை தன் செல்போனால் தாக்கியுள்ளார்.  இதில் காயமடைந்த கவாஸ்கர் மாவட்ட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுதொடர்பாக டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரியின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எதிர் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கவாஸ்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
Tags:    

Similar News