செய்திகள்

சபரிமலையை சீர்குலைக்க சர்வதேச சதி- பாஜக தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Published On 2018-12-24 06:50 GMT   |   Update On 2018-12-24 06:50 GMT
சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்கள் சபரிமலைக்கு சென்றதன் பின்னணியில் சதி இருப்பதாக பாஜக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். #Sabarimala #Manithi #BJP
திருவனந்தபுரம்:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கோவிலுக்கு வரும் முயற்சியில் இளம்பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்துவதால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.



சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையிலான 11 பெண்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மலையேறியபோது, ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுபற்றி பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, ‘சபரிமலையை சீர்குலைக்க வேண்டுமென்பதற்காக சர்வதேச அளவில் நடைபெறும் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான ரமேஷ் சென்னிதலா கூறும்போது, ‘சபரிமலையை வன்முறைக் களமாக்க அரசு முயற்சிக்கிறது. மனிதி அமைப்பினர் சபரிமலை வந்ததில் மர்மம் இருக்கிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்றார். #Sabarimala #Manithi #BJP
Tags:    

Similar News