இந்தியா (National)

மும்பையில் மின்கசிவால் தீ விபத்து- தீயில் கருகி 7 பேர் உயிரிழப்பு

Published On 2024-10-06 09:31 GMT   |   Update On 2024-10-06 09:31 GMT
  • மின்சாதன விற்பனை கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது
  • தீயை அணைத்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் சித்தார்த் காலனி பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பாரீஸ் குப்தா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவர் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் மின்சாதன விற்பனை கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் மின்சாதனப் பொருட்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

5.30 மணியளவில் கீழ் தளத்தில் பிடித்த தீ மாடிக்கும் பரவியது. அந்த சமயத் தில் பாரீஸ் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தீ வெப்பம் காரணமாக கண் விழித்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

ஆனால் அதற்குள் தீ அந்த வீட்டின் நான்கு புறமும் பரவிவிட்டது. அவர்களால் தப்ப இயலவில்லை. வீட்டுக்குள்ளேயே அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மும்பையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயை அணைத்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

ஆனால் பாரீஸ் குப்தா, அவரது குடும்பத்தினர் மஞ்சு, நரேந்திரா, பிரேம், அனிதா, விதி, கீதா ஆகிய 7 பேரும் வீட்டுக்குள்ளேயே பிணமாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News