இந்தியா

கெஜ்ரிவால் ராஜினாமா.. ஆட்சியமைக்க உரிமை கோரிய அதிஷி!

Published On 2024-09-17 13:28 GMT   |   Update On 2024-09-17 13:28 GMT
  • அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
  • கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.

கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார். மேலும், இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். 

Tags:    

Similar News