இந்தியா (National)

முன்னாள் காதலியை கொலை செய்து கல்லூரி வளாகத்தில் உடலை மறைத்து வைத்துவிட்டு தப்பிய மாணவன் கைது

Published On 2023-05-04 01:27 GMT   |   Update On 2023-05-04 01:27 GMT
  • மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
  • கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மாவில் உள்ள மருந்தகக் கல்லூரியில் படித்து வரும் முன்னாள் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துவிட்டு தப்பிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட நபரும், கொலையுண்ட பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண் மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தனது முன்னாள் காதலியான மாணவியை கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, நோட்புக் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர். மேலும், அதே கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

Tags:    

Similar News