இந்தியா

மத்திய மந்திரி ஆர்.கே.சிங் 

ராகுல் காந்தி வெளிநாடு சென்று பேசுவது ஏன் தெரியுமா? - மத்திய மந்திரி விளக்கம்

Published On 2023-06-01 22:52 GMT   |   Update On 2023-06-01 22:52 GMT
  • காங்கிரஸ் தலைவர்கள் பேச்சைக் கேட்க இந்தியாவில் ஆளில்லை.
  • எனவே அவர்கள் வெளிநாடு சென்று அறையில் கூடி பேசுகிறார்கள் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே அவர் பாடம் எடுப்பார். வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? என பேசினார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய மந்திரி ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்று பார்வையாளர்கள் யாரும் இல்லை. அதனால் அவர்கள் வெளிநாடு போகிறார்கள். அவர்கள் 100 முதல் 200 பேரை அழைத்து அறை ஒன்றில் கூட செய்து சொற்பொழிவாற்றுகிறார்கள். வெளிநாட்டுக்குச் சென்று, தங்களது சொந்த நாட்டை விமர்சிக்கும் இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இதுபோன்ற விஷயங்களை வேறு எந்த அரசியல் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News