இந்தியா (National)

சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி - இஸ்ரோ தகவல்

Published On 2023-08-19 21:03 GMT   |   Update On 2023-08-19 21:03 GMT
  • சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்டது.
  • தற்போது விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டா:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.

சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

நிலவை நெருங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதையடுத்து, திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News