இந்தியா

நிலவில் சந்திரயான் 3.. வெற்றிக்கு துணை நின்ற நிறுவனங்கள்!

Published On 2023-08-23 13:41 GMT   |   Update On 2023-08-23 13:41 GMT
  • இதுவரை உலகில் எந்த நாடும் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை தொட்டதில்லை
  • இந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மிக அதிகமான உயர்வை கண்டிருக்கின்றன

கடந்த ஜூலை 14 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான்-3 விண்கலம்.

இஸ்ரோ திட்டமிட்டபடி, இதன் லேண்டர் இன்று நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியிருந்தாலும் இதுவரை உலகில் எந்த நாடும் செய்து காட்டாத முயற்சியாக நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கல உருவாக்கத்தில் பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள்:

1) எல் அண்ட் டி - விண்கலத்தின் முக்கியமான பூஸ்டர் பகுதிகளில் தலைப்பகுதி, இடைப்பகுதி மற்றும் முனையிலுள்ள பக்கெட் ஃப்லாஞ்ச் ஆகியவற்றை இந்நிறுவனம் உருவாக்க உதவியது.

2) மிஸ்ர தாது நிகம் - அரசுடைமையான இந்நிறுவனம் முக்கியமான உலோகங்களையும், பிரத்யேக எக்கு பாகங்களையும் வழங்கியது.

3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் (BHEL) - விண்கலத்திற்கான பேட்டரியை இந்நிறுவனம் தயாரித்து வழங்கியது. இதன் துணை நிறுவனமான வெல்டிங் ரிஸர்ச் மையம் அடாப்டர் கருவிகளை வழங்கியது.

4) எம்டார் டெக்னாலஜிஸ் - விண்கலத்தின் இஞ்சின் மற்றும் பூஸ்டர் பம்ப்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

5) கோட்ரெஜ் ஏரோ ஸ்பேஸ் - கோட்ரெஜ் குழுமத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம், த்ரஸ்டர்கள் எனப்படும் முக்கிய பாகங்களை உருவாக்கி வழங்கியது.

6) அன்கிட் ஏரோ ஸ்பேஸ் - கலவை எக்குகள், எக்கு உதிரி பாகங்கள் மற்றும் டைட்டேனியம் போல்ட்களை இந்நிறவனம் உருவாக்கி தந்தது.

7) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - ஏவுகணையில் உபயோகப்படுத்தப்பட்ட S200 எனும் முக்கிய பூஸ்டர் மற்றும் ஃப்ளெக்ஸ் நாஸில் கட்டுப்பாட்டு சாதனங்கள் உட்பட முக்கிய பாகங்களை இந்நிறுவனம் வழங்கியது.

கடந்த 3 வருடங்களில் சந்திரயான்-3 திட்டத்தில் இணைந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

அவற்றில் சில நிறுவனங்களின் பங்கு உயர்வு குறித்த விவரங்கள்:

1) எல் அண்ட் டி - 170 சதவீதம்

2) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் - 200 சதவீதம்

3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் - 172 சதவீதம்

4) மிஸ்ர தாது நிகம் - 83 சதவீதம்

5) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - 66 சதவீதம்

6) ஸெண்டம் எலக்ட்ரானிக்ஸ் - 300 சதவீதம்

7) லிண்டே இந்தியா - 1000 சதவீதம்

8) எம்டார் டெக்னாலஜிஸ் - 41 சதவீதம்

9) கோட்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் - 15 சதவீதம்

மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக, மிக பெரும் பொருட்செலவில் வல்லரசு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா, மிக குறைந்த செலவிலேயே இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்திற்கான மொத்த செலவு:

1) ஏவுகணை - ரூ.365 கோடி

2) லேண்டர் மற்றும் ரோவர் - ரூ.250 கோடி

மொத்த செலவு - ரூ.615 கோடி

2008ல் நடத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கல முயற்சிக்கு ரூ.365 கோடி என்பதும், 2019ல் நடத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கல முயற்சிக்கு ரூ.978 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வல்லரசு நாடுகளால் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியும் என நம்பப்பட்டு வந்த நிலையில், உலகமே வியக்கும்படி இந்தியா இந்த சாதனையை புரிந்துள்ளது.

Tags:    

Similar News