இந்தியா (National)

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல்- ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை

Published On 2022-11-18 10:08 GMT   |   Update On 2022-11-18 10:18 GMT
  • புரளியாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகம்.
  • மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடை பயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கர் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷெகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணம் அடுத்ததாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ள நிலையில் இந்தூரில இனிப்பு கடை ஒன்றில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது புரளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News