இந்தியா

ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்

Published On 2024-01-24 12:29 GMT   |   Update On 2024-01-24 12:29 GMT
  • ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார்.
  • அசாமில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார். தற்போது அவரது யாத்திரை அசாமில் நடந்து வருகிறது. அங்கு யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று கவுகாத்தி நகர எல்லையில் ராகுல் காந்தியின் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வரும் நிலையில் அசாமின் நாகோன் மாவட்டத்தில் யாத்திரையில் பா.ஜ.க.வினர் இடையூறு ஏற்படுத்தினர். ஆபத்தான முறையில் ராகுல் காந்திக்கு அருகில் வந்து மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.

இதில் அசாம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். சில நேரங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் யாத்திரைக்குள் செல்ல வசதி செய்து தந்துள்ளனர். இது ராகுல் காந்தியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை உடைத்து அவரது மற்றும் யாத்திரையில் பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அசாம் முதல் மந்திரி மற்றும் அசாம் காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க நீங்கள் தலையிட்டு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News