இந்தியா

ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு: துபாய் பயணம் முடிந்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Published On 2023-12-02 01:13 GMT   |   Update On 2023-12-02 01:13 GMT
  • துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • பிரதமர் மோடி துபாய் பயணம் முடிந்து இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

புதுடெல்லி:

ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். துபாய் பால்ம் பகுதியில் நடந்த இந்திய சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அப்போது துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி மாநாடு நடைபெறும் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்திற்கு நேற்று சென்றார். அவரை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நயான் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், அவர்கள் இருவருடன் கைகோர்த்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என்றார். மேலும், மாநாட்டிற்கு வருகை தந்த உலக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், துபாயில் நடந்த 2-வது நாள் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

Tags:    

Similar News