இந்தியா

ராகுல் பதவி பறிப்பு, கோர்ட்டு உத்தரவின் பின் விளைவு: பா.ஜ.க. கருத்து

Published On 2023-03-25 02:02 GMT   |   Update On 2023-03-25 02:02 GMT
  • இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

புதுடெல்லி :

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாகூர் (மத்திய மந்திரிகள்):-

சட்டம் எல்லோருக்கும் சமமானதுதான். ராகுல் காந்தி தனது திருடர்கள் என்ற கூற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவதூறாகப் பேசி உள்ளார்.

பவன் கெராவை அசாம் போலீஸ் கைது செய்தபோது, எடுத்தது போன்று ராகுல் காந்தி விவகாரத்தில் நிவாரணம் பெற மேல் கோர்ட்டை நாடவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இதில் சதி நடக்கிறது.

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை, இயல்பானதுதான். தண்டிக்கப்பட்ட நாளில் இருந்தே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்த சட்ட நடைமுறையை மக்களவை சபாநாயகர் உறுதி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.

எஸ்.பி.எஸ்.பாகல் (சட்டத்துறை ராஜாங்க மந்திரி):-

இது சட்டப்படியான நடவடிக்கை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

பிரகலாத் ஜோஷி (பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி):-

இது சட்டப்படியான நடவடிக்கை ஆகும். இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது. இது கோர்ட்டால் எடுக்கப்பட்டது.

பூபேந்தர் யாதவ் (மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி):-

இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பதற்கு கோர்ட்டு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தது. ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டின் சட்டத்தை விட மேலானவர்களா?

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பின்பெயரை அவதூறாகப் பேசுவது ஒரு தேசியத்தலைவரின் வேலையா?

கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News