டெல்லி கனமழை.. ஊருக்குள் மழைநீரில் Boating சென்ற பாஜக கவுன்சிலர் - வீடியோ
- டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
- முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் ஏராளனமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர். முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் பா.ஜ.க. கவுன்சிலர் ரவீந்தர் சிங் நேகி படகில் சென்ற சம்பவம் அரங்கேறியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை எடுத்துரைக்கும் வகையில், அவர் இவ்வாறு செய்துள்ளார். இதன் மூலம் டெல்லி அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அனைத்து வடிகால்களும் நிரம்பி வழிகின்றன. பருவமழைக்கு முன் வடிகால்களை தூர் வாராததால் தண்ணீர் தேங்கியுள்ளது. வினோத் நகர் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது என்றார்.