கெஜ்ரிவால் வீட்டிற்கு செல்லும் பாதை மூடல்: வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: டெல்லியில் நிலவும் பரபரப்பு
- மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததாக டெல்லி மந்திரி ஆதிஷி தெரிவித்திருந்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நேற்றோடு 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில்தான் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அதன்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரது வீடு இருக்கும் பாதை மூடப்பட்டு அங்கு வசிப்பவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆதிஷி கூறியதுபோல் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.