தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதி
- கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்.
- இவர் இதற்குமுன் வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் எடுத்துள்ளார்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டரின் அறிவுரையின் பேரில் அவர் மும்பையில் உள்ள பிரிச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிவாஜிராவ் கார்ஜே வெளியிட்டுள்ள அறிக்கையில், "3 நாட்களுக்கு சரத்பவார் ஆஸ்பத்திரியில் தான் இருப்பார்.
2-ந் தேதி அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 3-ந் தேதி நடைபெறும் கட்சி கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொள்வார். கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்" என்றார்.
81 வயதான சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.