ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி
- மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
- பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
இதுகுறித்து சுல்தான்பூர் மாவட்டட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் கூறியதாவது:-
கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கினர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. நான்காவது உடல் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது.
நீரில் மூழ்கிய நான்கு இளைஞர்களின் வயது 18-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் அவர்களின் தகனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.