இந்தியா

கேரள மாநிலம் மலப்புரத்தில் இளைஞர் இயக்க கூட்டத்தில் ஹமாஸ் தலைவர் ஆன்லைன் பேச்சால் பரபரப்பு

Published On 2023-10-29 05:57 GMT   |   Update On 2023-10-29 05:57 GMT
  • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் சிலர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  • கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலிடாரிட்டி இளைஞர் ஒற்றுமை இயக்கம் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது.

திருவனந்தபுரம்:

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் சிலர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இதுபோன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால், ஆன்லைன் மூலம் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலிடாரிட்டி இளைஞர் ஒற்றுமை இயக்கம் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தான் காலித் மஷால் வீடியோவில் தோன்றி உரையாற்றி உள்ளார். அவர் பேசுகையில், சியோனிச பயங்கரவாத செயல்களில் இருந்து மஸ்ஜித் அக்சாவை விடுவிக்க முயற்சிக்கும் பாலஸ்தீனப்போராளிகளுக்கு ஆதரவளிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 1967-ல் இஸ்ரேலில் வலது சாரி அரசியல் குழு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அல்அக்சாவை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஹமாஸ் தலைவர் காணொலி நிகழ்ச்சிக்கு கேரள பாரதிய ஜனதா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் கூறுகையில், மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் காலித் மஷால் ஆன்லைனில் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாலஸ்தீனத்தை காப்பாற்றுங்கள் என்ற போர்வையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பையும், அதன் தலைவர்களையும், போர்வீரர்கள் என்று கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் சுரேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். உடனடியாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News