சிறப்புக் கட்டுரைகள்

12 ராசிகளுக்கான குருமங்கள யோகத்தின் பலன்கள்!

Published On 2024-07-16 09:29 GMT   |   Update On 2024-07-16 09:29 GMT
  • கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.
  • குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கோட்சாரத்தில் வருகிற ஆகஸ்டு 26-ந் தேதி வரை ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த கிரக சேர்க்கை குருமங்கள யோகமாகும். இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களை நேற்று விரிவாக பார்த்தோம். தற்போது 12 ராசியினருக்கும் இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்: தாராள தன வரவு

ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயும் பாக்கிய அதிபதி, விரய அதிபதியான குருவும் சேர்ந்துள்ளனர். இதனால் மேஷ ராசிக்கு வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித் திறமை மேம்படும். தன வரவில் நிலவிய தடை தாமங்கள் விலகும். சேமிப்புகள் உயரும். வராக்கடன்கள் வசூலாகும்.

குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் விலகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும் . பூர்வீகச் சொத்து மீதான வம்பு, வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சுப விரயங்கள், சுப விசேஷங்கள் நடைபெறும். திருமணம், குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பழநி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

ரிஷபம்: திருமணத்தடை அகலும்

ரிஷப ராசியில் 7,12-ம் அதிபதி செவ்வாயும் 8,11ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தனது சம சப்தம பார்வையால் குருவுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு/கேது தோஷம் விலகி திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத் துணை மூலம் சொத்து அதீத பொருள் வரவு உண்டாகும்.

பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். கூட்டுத் தொழிலில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மறையும்.நிலம், வாகனம் வாங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும், மேலும் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அரசு உத்தியோக முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டு. திருப்பரங்குன்றம் முருகனை வழிபடவும்.

மிதுனம்: சுப விரயங்கள் உண்டாகும்

ராசிக்கு 12-ம் மிடமான அயன, சயன, வெளிநாட்டு பயண ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. 7, 10-ம் அதிபதி குருவும். 6,11-ம் அதிபதியான செவ்வா யும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். கடன் பெற்று வீடு, வாகன, யோகம் மற்றும் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற சுப தேவைகளை நிறைவு செய்வீர்கள். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வெளிநாடு செல்வதற்கான அறிகுறிகளும் உள்ளன. புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை.

தடைபட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உடல்நலப் பிரச்சிினைகள் சீராகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சீராகும். வாழ்க்கைத் துணையால் நண்பர்க ளால், தொழில் கூட்டாளியால், வாடிக்கை யாளர்களால் சகாயமான பலன் உண்டு. பட்டமங்கலம் சென்று குரு பகவானை வழிபடவும்.

கடகம்: காதல் வெற்றி

ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் 5,10-ம் அதிபதியான செவ்வாயும், 6,9-ம் அதிபதியான குருவும் சேர்க்கை பெற்று குரு மங்கள யோகத்தை வலுப்படுத்துகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும், பாக்கிய அதிபதி குருவும் ஒருங்கே பலம் பெறுகிறார்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். முன்னோர்கள் வழிபாடு, பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பாக்கிய பலன்கள் அதிகமாகும். கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.

தொழில், உத்தியோகத்தில் நிலவிய மன சஞ்சலம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். சிலருக்கு சுய விருப்ப விவாகம் நடக்கலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பாக தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். செவ்வாய் கிழமை திருத்தணி முருகனை வழிபடவும்.

சிம்மம்: தொழில் விருத்தி

ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 4,9ம் அதிபதி செவ்வாயும் 5, 8ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், ஆன்மீகம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாகும். தாய், தந்தை வழிச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் விலகி முழு பங்குத் தொகையும் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.

பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும்.ஆலங்குடி சென்று குரு பகவானை வழிபடவும்.

கன்னி: இடப்பெயர்ச்சி

கன்னி ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் 4, 7ம் அதிபதி குருவும் 3,8ம் அதிபதி செவ்வாயும் இணைகிறார்கள். இது குரு மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறது. இடப்பெயர்ச்சி செய்ய, முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட சிறப்பான காலம். முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. பிறவிக்கடனும், பொருள் கடனும் தீர்க்க உகந்த காலம். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும்.

பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவுகள் குறையும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிவினை போன்ற பாதிப்புகள் சீராகும். அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். மருதமலை முருகனை வழிபடவும்.

துலாம்: பேரதிர்ஷ்டம்

ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் துலாம் ராசிக்கு 2, 7-ம் அதிபதியான செவ்வாயும் 3, 6-ம் அதிபதியான குருவும் இணைந்து குருமங்கள யோகம் உருவாகி உள்ளது. துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும் பேரதிர்ஷ்ட மும் ஒருங்கே சேர்ந்து செயல்படும் அமைப்பாகும். ஞாபக சக்தி கூடும். கண், காது, மூக்கு பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். கை மறதியாக வைத்த பொருட்கள், தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். வழக்குகள் தள்ளுபடியாகும்.

புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்யலாம் . வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டு. தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும். திருமணத் தடை அகலும். 2வது குழந்தை பிறக்கும்.சுவாமிமலை முருகனை வழிபடவும்.

விருச்சிகம்: வருமான உயர்வு

விருச்சிக ராசிக்கு 7ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் ராசி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாயும் 2 ,5ம் அதிபதியான குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகம். இதனால் செயல்களில் வெற்றி உண்டாகும். வருமானமும் வசதியும் உயரும். பொன் பொருள் சேரும். குல தெய்வ பிரார்த்த னைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த காலம். குழந்தைக்காக ஏங்கிய வர்களின் விருப்பம் நிறைவேறும். உயர் கல்வி யோகம் உண்டு.

வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.பூர்வீக சொத்து பிரச்சினை முடிவிற்கு வரும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. சுய ஜாதகரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடை பெறும். தொழில், கூட்டுத் தொழில், உத்தியோகத்தில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். குன்றத்தூர் முருகனை வழிபடவும்.

தனுசு: கடன் கிடைக்கும்

தனுசு ராசிக்கு 6ம்மிடமானருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ராசி அதிபதி, சுக ஸ்தான அதிபதியான குரு 5,12ம் அதிபதியான செவ்வாயுடன் சேருகிறார். இது தனுசு ராசிக்கு குரு மங்கள யோகத்தை மேம்படுத்து கிறது. சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கூடும். விவசாயம் செழிக்கும். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும்.

இதுவரை எதிர்பார்த்த, விண்ணப்பித்த தொழில், விவசாய, சொத்து வங்கி கடன் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை பாராட்டு உண்டு. அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் துவங்க அரசின் ஒப்புகை கிடைக்கும். சிலர் வேலை மாற்றம் செய்யலாம்.சோலைமலை முருகனை வழிபடவும்.

மகரம்: சுப யோகம்

ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி செவ்வாயும் 3, 12-ம் அதிபதி குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகமாகும். ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார உயர்வை தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது.

சிலர் உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும். வடபழனி முருகனை வழிபடவும்.

கும்பம்: கடன் தீரும்

ராசிக்கு 4 ம்மிடமான சுக ஸ்தானத்தில் 2 ,11ம் அதிபதி குருவும் 3,10ம் அதிபதி செவ்வாயும் சேர்ந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்து கிறார்கள். குருமங்கள யோகம் கும்ப ராசிக்கு வரமாக செயல்படும். நிச்சயம் வீடு மனை யோகம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். பாதை இல்லாத சொத்து, பட்டா இல்லாத சொத்து, முறையான ஆவணங்கள் இல்லாத சொத்து தொடர்பான சங்கடங்கள் விலகும்.

தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும் . வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்கள் தீரும். பேச்சுத் திறமை, லௌகீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கம் குறையும். காது, மூக்குத் தொண்டைக்கான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். குருவித்துறை குருபகவானை வழிபடவும்.

மீனம்: நல்ல மாற்றம்

ராசிக்கு 3ம்மிடமான உப ஜெய ஸ்தானம், சகாய ஸ்தானத்தில் ராசி அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி குருவும் தன அதிபதி, பாக்கிய அதிபதி செவ்வாயும் இணைத்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. வீடு மாற்றம், வேலை மாற்றம், நாடு மாற்றம் என வாழ்க்கை வளம் பெறத் தேவையான மாற்றங்கள் உண்டாகும். இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுப்பது, ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சொத்து வாங்குதல், விற்றல், ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்றவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குடும்ப உறவுகளுடன் சாதகமான போக்கு தென்படும்.உங்களுக்கு மன அமைதியைத் தரும் நண்பர்களின் சந்திப்பால் மன நிம்மதி கூடும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

மாலை மலர் வாசகர்கள் குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Tags:    

Similar News