சிறப்புக் கட்டுரைகள்

கோடீஸ்வரராக்கும் குருமங்கள யோகம்

Published On 2024-07-15 08:50 GMT   |   Update On 2024-07-15 08:50 GMT
  • ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.
  • குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு மங்கள யோகம்.

குரு மற்றும் செவ்வாய் சம்பந்தத்தால் ஏற்படும் குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் நிறைந்த சொத்து சுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இவர்கள் பிறவி கோடீஸ்வரராக இருப்பார்கள். சிலர் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள். தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும்சேர்ந்து உள்ளனர்.

இந்த குருவும், செவ்வாயும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு ராசியில் இணைவதால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைவதால் பெரும் பலன்கள் கிடைக்கப் போகின்றன. குரு மங்கள யோகம் பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

குருபகவான்

சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னத மான உணர்வுகளை உண்டாக்கக் கூடியவர்.

நவகிரகங்களில், எதிர்மறை பலன் எதுவும் தன்னகத்தே கொண்டிராத முழு சுபகிரகம் குரு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவரே தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றிற்கு காரகன்.

ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, சொத்து சுகம் மிகச் சிறப்பாக இருக்கும்.இவை தவிர்த்து பணம் சார்ந்த வங்கி, நிதி நிறுவனங்கள், சிட் பண்டுகள், தங்க நகை கடை , நகை செய்யும் வேலை , மஞ்சள் வியாபாரம் போன்ற தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள்.

கால புருஷ தத்துவப் படி குரு 9, 12 -க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம் ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசி. குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையிலும் அதிக கிரகம் இருந்தால் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களை குறைத்து, நல்ல பலன்களை செய்யும்.

பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன சயன போக ஸ்தானத்திற்கு பொறுப்பு வகிக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்கும் போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், புண்ணிய மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.

சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத்த கூடியவர். திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை மோட்சம், முக்தி நிலை பெறுதல் போன்றவற்றை 12ம்மிடத்தின் மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போக விடாது.

செவ்வாய்

செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம்மிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம்.

அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரனை, ஆதாயம் உண்டு. பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார்.

பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதே போல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே.

அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டி மன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். அதே போல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும்.

குருமங்கள யோகம்

இத்தகைய குரு மற்றும் செவ்வாய்க்கு ஒரு ஜாதகத்தில் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குரு மங்களயோகமாக செயல்படும். புனிதன் குருவிற்கும் மங்களன் செவ்வாய்க்கும் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குருமங்களமாக செயல்படும்.

ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் குருமங்கள யோகமாகும். நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும்.

நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். சகல சவுபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பண்ணை யாளர்களாக இருப்பார்கள்.

தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

தாய் வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.இவர்கள் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.

அத்துடன் எந்த கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.

உதாரணமாக குரு என்றால் குழந்தை, பணம், தங்கம். கோடிக்கான பணம், தங்கத்தை குறிக்கும் கிரகம் ஒரு ஜாதகத்தில் பலமாக இருந்தால் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார்.

நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை. ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த வித மான யோகங்களாக இருந்தாலும் 4 விதமாகவே பலன் வழங்கும்.

1. பொருள் காரகத்துவத்தை அபரிமிதமாக வழங்குதல். பொருள் காரகத்துவம் என்றால் தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வழங்குதல்.

2. போதிய பண வசதி இல்லாவிட்டாலும் உயிர் காரகத்துவங்களால் அதீத அன்பை பெறுவது. அதாவது உற்றார், உறவினர்கள், பெற்றோர்கள், மனைவி, மக்களின் அன்பு, மரியாதையை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வது.

3. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் பரிபூரணமாக கிடைத்து நிம்மதியாக வாழ்வது. தேவைக்கு அதிகமான பணம், உபரியான சொத்துக்கள், சிறப்பான தொழில் அல்லது கவுரமான உத்தியோகம், நல்ல பெற்றோர்கள், அன்பான வாழ்க்கைத் துணை, அனுசரணையான பிள்ளைகள் என சகல ஐஸ்வர்யத்து டன் வாழும் வாழ்க்கை.

4. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் இன்றி வாழ வேண்டிய நிலை.அடிப்படை தேவைக்கு கூட திணறும் நிலை, உறவினர்களால் மன உளைச்சல். பூமியில் ஏன் பிறந்தோம் என்று நிர்பந்தத்திற்காக வாழ்தல்.

தற்போது கோட்சாரத்தில் குருவும் செவ்வாயும் ரிஷப ராசியில் ஓரே ராசியில் சேர்ந்து உள்ளார்கள். இந்த கிரக கூட்டணியால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.

குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள்.

நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சொத்து சேர்க்கை, மருத்துவராகும் யோகம், விவசாயத்தின் மூலம் வருமானம், நல்ல மன ஆரோக்கியம், நல்ல நிலையில் இருக்கும் தாய், தந்தை , சீருடை பணி, காவல் துறை, ராணுவத்தில் வேலை, நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், தீயணைப்புத் துறை, சமையல் வேலை, தொழில் போன்றவற்றை செவ்வாய் மற்றும் குருவின் வலிமையைப் பொருத்து இந்த கிரகங்கள் கொடுக்கும் எனலாம்.

செல்வாக்கு, சொல் வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், மரியாதை தானாக உயர்வது, எதிரிகள் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி வெற்றி, சகோதர வழி ஆதரவு, சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து நிறைந்த உத்தியோகம், தொழில். நாடாளும் யோகம்.

சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். ரியல் எஸ்டேட், புரமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகளை உருவாக்கு வதும் இந்த குரு மங்கள யோகம் தான்.

இந்த கிரகச் சேர்க்கை அதாவது குருவும் செவ்வாயும் மேஷம், சிம்மத்தில் நின்றால் ஜாதகரின் சொத்து மதிப்பை கணக்கிட முடியாத விதத்தில் அதீத சொத்து சேர்க்கை இருந்து கொண்டே இருக்கும்.

இந்த கிரக சேர்க்கை பார்வையில் குருவும் செவ்வாயும் நட்பு ஆட்சி உச்சம், நீசபங்க ராஜயோகம், திக் பலம் ஆக இருந்து தசா நடக்கும் போது லக்னாதிபதி வலுவுக்கு ஏற்ப பலனை வாரி வழங்குவார்கள். மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம், ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதன்மையான யோக பலனை தரும்.

குருமங்கள யோகத்தால் ஏற்படும் அசுப பலன்கள். இரண்டு கிரகங்களும் எதிர்மறை பகை வீடுகளில் ஒன்றாக வரும்போது அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை நோக்கித் திரும்புகிறது.

குரு செவ்வாய் தரும் குரு மங்கள யோகத்தில் ராகு கேது இணைவது , சனி இணைவு பார்வை பெறுவது, அல்லது சூரியனால் அஸ்தங்க தோச பெறும் போது பலன் குறைவுபடும் அல்லது யோகம் தராது. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசி, லக்னத்திற்கு சுப பலன் குறைவு படும்.

லக்னாதிபதி, ராசி அதிபதி ஓரளவு நல்ல கேந்திர கோணத்தில் பாதிக்காமல் இருப்பதும் யோகத்தை அனுபவிக்க வழி செய்யும். கோட்சாரமும் குரு மங்கள யோகமும் தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் சேரும் இந்த கிரகச் சேர்க்கை ஆகஸ்டு 26 வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.

ஜோதிடத்தின்படி, அதிர்ஷ்டம், செழிப்பு, கல்வி, அறிவு போன்றவற்றுக்கு காரணமான கிரகமான குருபகவான் தைரியம், வீரம், சொத்து, சுகத்திற்கு காரக கிரகமான செவ்வாயுடன் சேருவதால் ஒரு சில ராசிக்கு, வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 12 ராசிக்கும் ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள குரு மங்கள யோகத்தால் ஏற்படப் போகும் மாற்றங்களை நாளை காணலாம்.

தொடரும்...

Tags:    

Similar News