கிரிக்கெட்

இனிமேல் வரமாட்டோம்.. நொய்டா மைதானத்தை விமர்சித்த ஆப்கானிஸ்தான்

Published On 2024-09-10 04:42 GMT   |   Update On 2024-09-10 04:42 GMT
  • மழை பெய்யாமலே முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
  • கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

நொய்டா:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கூட இல்லை. அதனால், ஆப்கானிஸ்தான அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை சொந்த மண்ணாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிசிசிஐ அவ்வப்போது ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி அளித்து வருகிறது. அப்படி செய்யும் உதவி சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு முக்கிய காரணம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் அணி பிசிசிஐ-இடம் உதவி கேட்டது. பிசிசிஐ-யும் இந்தியாவில் போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதற்காக நொய்டா மைதானத்தை தேர்வு செய்து அளித்தது. இந்த போட்டி நடக்கவிருந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தன.

இந்த நிலையில் நேற்று முதல் நாள் போட்டி நடைபெற இருந்தது. காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் நிச்சயமாக போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது.

பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசும் பகுதிகளிலும் நிறைய மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அவற்றை விரைவாக நீக்க முடியாமல் மைதான ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்களையாவது வீசி விடலாம் என மாலை 4 மணி வரை நடுவர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால், மைதான ஊழியர்களால் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நொய்டா மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நொய்டா மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. அங்கு மழை நீர் வடிகால் வசதி இல்லாதது மட்டுமின்றி, கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்தியாவில் சிறந்த வசதிகளை கொண்ட மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்து இருக்கலாம். அதுவே அந்த அணிக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி கூறியதாவது:-

இது ஒரு பெரிய குழப்பம். நாங்கள் இங்கு திரும்பி வரமாட்டோம். வீரர்களும் இங்குள்ள வசதிகளால் மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் முன்கூட்டியே பேசினோம், எல்லாமே ஒழுங்காக இருக்கும் (ஊடக வசதிகளுடன்) என்று ஸ்டேடியம் தோழர்களால் உறுதியளிக்கப்பட்டது.

என்று அவர் கூறினார்.

கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தில், 2016 -ல் இளஞ்சிவப்பு பந்து துலீப் டிராபி போட்டி நடைபெற்றது.

இருப்பினும், கார்ப்பரேட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் காரணமாக செப்டம்பர் 2017-ல் பிசிசிஐ தடை செய்தது. பிசிசிஐயுடன் இணைந்த எந்தப் போட்டியும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த மைதானம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக செயல்பட்டது.

"நாங்கள் இங்கு வந்ததில் இருந்து எதுவும் மாறவில்லை, இது கொஞ்சம் கூட முன்னேறவில்லை" என்று மற்றொரு ஏசிபி அதிகாரி கூறினார்.

Tags:    

Similar News