பாளை அருகே சுற்றுலா வேன் மீது லாரி மோதி 19 பேர் காயம்
நெல்லை:
குமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 24 பேர்கள் ஒரு வேனில் அன்னை வேளாங்கன்னி கோவிலுக்கு சென்று விட்டு ஊர்திரும்பினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வந்த வேன் பாளை ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலையில் வந்தது.
அப்போது வேனில் வந்தவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக வேனை ஓரமாக நிறுத்தினார்கள்.
அப்போது வேனுக்கு பின்னால் வேகமாக வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். வேனின் பின்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ஈச்சங்காடு நாராயணன் (50), முட்டத்தைச் சேர்ந்த ஜெரால்ட் (49), அவரது மனைவி மேஜிரூபா (40), அம்மா தங்கம் (55), ரீகன் (35), சஸ்ரோஸ் (53) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.