தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாடுக்கு போலீசார் அனுமதி

Published On 2024-09-08 08:09 GMT   |   Update On 2024-09-08 08:09 GMT
  • வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
  • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News