search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்கனமழை பெய்தது.
    • நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இடி-மின்னலுடன் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கனமழை பெய்ததால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. களக்காடு-சிதம்பராபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    களக்காடு பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 20 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 3-வது நாளாக கனமழை பெய்தது. அங்கு 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.

    மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தென்காசி சாலையில் அமைந்துள்ள புதூர், சீதபற்பநல்லூர், வெள்ளாளன்குளம் பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு வெடிப்பு விழுந்து கிடந்த நிலையில் 3 நாட்களாக தொடர் மழையால் ஓரளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மாநகரில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரவில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது.

    அதீத மின்னல் காரணமாக மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் வைத்திருப்போர் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் வாசலில் குளம்போல் மழை நீர் தேங்கியது. டவுன் சாப்டர் பள்ளி மைதானம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ்பகுதி ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பாளையில் 9 சென்டி மீட்டரும், நெல்லையில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 113.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 359 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 117.45 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறில் 69.40 அடி நீர் இருப்பு உள்ளது. கொடுமுடியாறில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 39 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 30 மில்லி மீட்டர், காக்காச்சியில் 14 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பரவலாக பெய்தது. செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தென்காசியில் 10 மில்லி மீட்ரும், செங்கோட்டையில் 8.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்தவரை கடனா அணை, கருப்பாநதி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அணைகள் நீர்மட்டம் உயரும் அளவில் மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மணியாச்சி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கயத்தாறில் 43 மில்லிமீட்டரும், கடம்பூரில் 50 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம் பகுதியில் மதியத்திற்கு பின்னர் திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு கனமழை பொழிந்தது. அங்கு 39 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில் பட்டி, காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், காடல்குடி, விளாத்திகுளம், வைப்பார், வேடநத்தம் என அனைத்து பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது.

    • மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
    • கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம் எனவும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அறிவித்துள்ளார்.

    களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியை ஒட்டி கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தலையணையிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கிறார்.
    • 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    நெல்லை:

    தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, சமீப காலமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்த அவர், ஜெயலலிதா வழியில் மக்கள் பயணம் என்னும் பெயரில் கடந்த மாதம் 17-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.

    இந்நிலையில் 2-ம் கட்டமாக இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக நேற்று இரவு நெல்லை வந்த சசிகலாவுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் வைத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார்.

    அவர் இன்று மாலை 4 மணி அளவில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். முதலாவதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் சசிகலா அதனை தொடர்ந்து சந்திப்பு அண்ணா சிலை, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பின்னர் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டவுன் காட்சி மண்டபத்தில் தொண்டர்கள் இடையே உரையாற்றுகிறார். பின்னர் சுத்தமல்லி விலக்கு, நடுக்கல்லூர் பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்கிறார். அங்கிருந்து பழைய பேட்டை வழியாக ராமையன்பட்டி, மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து, தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் தொண்டர்கள் இடையே பேசுகிறார்.

    அப்போது கரையிருப்பு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று இரவு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முருகன்குறிச்சி, நீதிமன்றம், பாளை பஸ் நிலையம், குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆகிய இடங்களில் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி அவர் எங்கும் செல்லவில்லை. பின்னர் 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் வண்ணார்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடியை கட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவோடு, இரவாக அ.தி.மு.க. கொடிகம்பங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

    • 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது.
    • மின் உற்பத்திக்கு புதிய வகை எரிபொருட்கள் வினியோகம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியுடன் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என மொத்தம் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.

    மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து அதன் மூலமும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வரை முதல் 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.

    இந்த 2 அணு உலைகளிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலைக்கு 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில் 3-ல் 1 பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும்.

    இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

    இந்த எரிபொருளை இந்தியா-ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின்படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.


    இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யாவின் ரோஸாடாம் நிறுவனத்தின் ஒரு அங்கமான 'டிவிஇஎல் ஜேஎஸ்சி' என்ற நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக இந்தியா-ரஷ்யா இடையே ரூ.10 ஆயிரத்து 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த புதிய எரிபொருள் கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    3-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீராவி என்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. 4-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணு உலை அழுத்த கலன்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த 2 அணு உலைகளுக்கும் ரஷ்யாவின் ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் தயாரிக்கும் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ரோஸாடாம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புதிய எரிபொருள் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை 3-ல் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது. அப்போது கூடுதல் காலங்கள் மின் உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.

    புதிய வகை எரிபொருள் மூலம் எரிபொருள் வாங்கும் செலவு குறைவதோடு மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும்.

    3 ஆண்டுகளுக்கு 3 முறை இதுவரை எரிபொருள் மாற்றம் நடந்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு 2 முறை என குறையும். அப்போது ஒரு முறை எரிபொருள் மாற்றும் செலவு மிச்சமாகும்.

    கூடங்குளத்தில் இந்த 6 அணு உலைகளும் செயல்பட தொடங்கிவிட்டால் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். அப்போது மின்தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 7 ஜிகா வாட்ஸ் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வருகிற 2029-ம் ஆண்டுக்குள் அதனை 13 ஜிகா வாட்சாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சில் இந்தியா அந்த பாதையை நோக்கி பயணித்து வருகிறது.

    தற்போது புதிய வகை எரிபொருள் வழங்க உள்ள இந்த டிவிஇஎல் நிறுவனம் உலகம் முழுவதும் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 14 நாடுகளுக்கு இந்த எரிபொருளை வழங்கி அதன் மூலம் ஆண்டுக்கு 400 பில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தை ஒட்டி ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதி வளாகத்தில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள், கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனி கட்டிடங்களில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த 2 விடுதிகளிலும் சேர்த்து சுமார் 220 மாணவர்கள் தங்கி இருந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறையையொட்டி விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது செல்போன்கைளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    பின்னர் இரவில் செல்போன்களை வழக்கமாக சார்ஜ் செய்யும் இடங்களில் வைத்துவிட்டு தூங்கி உள்ளனர். மேலும் ஒரு சிலர் தங்களது தலை பகுதிக்கு அருகே செல்போன்களை வைத்து தூங்கி உள்ளனர்.

    நள்ளிரவில் மாணவர்கள் விடுதியில் உள்ள பின்பக்க காம்பவுண்டு சுவரை தாண்டி விடுதிக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அந்த நபர்கள் 2 விடுதி கட்டிடங்களிலும் இருந்து மாணவர்களின் 23 செல்போன்கள் மற்றும் அவர்களது சில சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

    இன்று காலை மாணவர்கள் எழுந்து செல்போனை தேடிய போது அவை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், விடுதியின் உட்புறமும், வெளிபுறமும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளரான நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
    • கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அங்கு 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. அந்த அணையில் 115.20 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 1154 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 474 கனஅடி நீர் வந்த கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியில் 21 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மாநகரில் நேற்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதியில் அமைந்துள்ள கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் 1.10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. அங்கு 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்தது. இரவு 8 மணி வரையிலும் பெய்த கனமழையால், மழை நீர் செல்ல முடியாத நிலையில் சாக்கடை நீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது. அங்குள்ள கீழரதவீதி, வலம்புரி விநாயகர் கோவில் ரோடு சந்திக்கும் தேரடி நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பகலில் கடுமையான வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இளையரசனேந்தல் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. கழுகுமலை பகுதியில் 2 மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு மழை நிற்கும் வரை மின்தடை ஏற்பட்டது.

    • விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.
    • தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    நெல்லை மாநகராட்சியின் 6-வது மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 5-ந்தேதி புதிய மேயருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வெற்றி சான்றிதழுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இன்று காலை நெல்லை மாநகராட்சியின் 7-வது மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்காக மேயர் ராமகிருஷ்ணன் வழக்கமாக பயன்படுத்தும் தனது சைக்கிளில் டவுனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்தார். வழியில் நெல்லையப்பர் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.


    அதன் பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மேயர் ராமகிருஷ்ணனின் தாயார் மரகதம்மாள் (வயது 95) அங்கி மற்றும் செங்கோலை தனது மகனுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மேயர் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    • புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அன்னை மூகாம்பிகை ஆலயம் தனியாக உள்ளது.

    நேற்று மாலையில் 6.40 மணிக்கு கோவில் பூசாரி முகேஷ் பட்டர் மூகாம்பிகைக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டு பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார்.

    அங்கு தனது மருமகளின் பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று வேண்டி அதே பகுதியை சேர்ந்த முத்து ஆச்சாரி தனது மனைவியுடன் அங்கு வந்திருந்தார். அப்போது மூகாம்பிகை கல்சிலையில் அம்மன் கண்களில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை அவரது மனைவி பார்த்துள்ளார்.

    இதை அருகில் இருந்த தனது கணவரிடம் கூறினார். அவரும் அதை பார்த்து வியந்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார்.

    உடனே அங்கிருந்த பக்தர்களும் திரண்டு வந்து பார்த்து வியந்தனர். இதனை ஏராளமானோர் புகைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சுமார் 1 மணி நேரத்தில் காட்டுத்தீ போன்று தகவல் பரவி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வரிசையாக பார்த்து செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.

    இந்த அதிசயத்தை காண இரவு 10.30 மணி அளவிலும் கடுமையான கூட்டம் அலைமோதியது. வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பழம், லட்டு பிரசாதமாக தங்கையா கணேசன் வழங்கினார். அதன்பின்னர் கோவில் நடையை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதனால் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அதன்பின்பும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அம்மனை காணவந்தனர். ஆனால் கோவில் நடை அடைக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது அம்மனின் கண்கள் வழக்கம் போல் இயல்பாகவே காட்சியளித்தது. அங்கு அம்மனுக்கு ஏற்றி வைத்திருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

    • போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.
    • 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்கு தப்பி சென்றார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நபரை வங்கி மோசடி வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

    2002 ஆம் ஆண்டு சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ. வங்கியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பல போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ 2004 ஆம் ஆண்டு 2 குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து சலபதி ராவ் தலைமறைவானார்.

    இதனையடுத்து தனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு 7 ஆண்டுகளாக காணாமல் போனதால் தனது கணவர் இறந்து விட்டதாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கின் முடிவில் சலபதி ராவ் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

    ஆனாலும் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது. அவர்களின் விசாரணையில், சலபதி ராவ் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சேலத்திற்கு தப்பிச் சென்று தனது பெயரை வினீத் குமார் என்று மாற்றிக்கொண்டு அப்பெயரில் ஆதார் கார்டையும் பெற்றுள்ளார். அதன்பிறகு வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனாலும் சலபதி ராவ் தனது முதல் மனைவியின் மகனுடன் தொடர்பில் இருந்ததை அவரது இரண்டாவது மனைவி மூலம் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்குச் சென்று, கடன் வசூலிக்கும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.

    பின்னர் உத்தரகாண்டில் உள்ள ருத்ராபூருக்கு சென்று ஒரு பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அந்த இடத்தை கண்டுபிடித்து 2016 ஆம் ஆண்டு சிபிஐ அங்கு வந்த போது அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

    இதனையடுத்து அவுரங்காபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்து தனது பெயரை ஸ்வாமி விதிதாத்மானந்த் தீர்த்தா என்று அவர் மாற்றிக் கொண்டு அதன் பெயரில் ஒரு ஆதார் கார்டையும் வாங்கியுள்ளார்.

    ஆனால் 2021 டிசம்பரில் ஆசிரமத்தின் மேனேஜர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் உள்ள பரத்பூருக்கு சென்று 2024 ஜூலை 8 வரை அங்கேயே தங்கி இருந்தார். பின்னர் திருநெல்வேலிக்கு வந்தவர் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்,

    இதனை தெரிந்துகொண்ட சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி நரசிங்க நல்லூர் கிராமத்தில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    • 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
    • போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    மதுரையை சேர்ந்த கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு காரில் வருவதாகவும், அந்த கும்பல் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று இரவு மூன்றடைப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கருப்பு நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது காரின் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் ஒரு பெட்டியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே அந்த பணத்தை போலீசார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டிய நகர் 5-வது தெருவை சேர்ந்த சீமை சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இந்த கும்பல் சமீப காலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளது.

    அதாவது ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி நம்பவைத்து பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ரூ.2 லட்சம் வழங்கும்போது அதில் ஒரு கட்டு பணத்தில் மட்டும் நல்ல நோட்டுகளை வைத்துவிட்டு மற்ற கட்டுகளில் கள்ள நோட்டுகளை வைத்து வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இந்த வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பண மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டதும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்கும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அசல் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    அந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்பவர்கள் யார்? அவர்களாகவே எந்திரம் மூலம் அச்சடிக்கிறார்களா? அப்படியானால் எங்கு வைத்து அதனை செய்கிறார்கள்? இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக முக்கிய பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
    • திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

    மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

    கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.

    நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.

    ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.

    ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.

    ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

    இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.

    இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.

    இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.

    கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இரவு வீடு திரும்பாததால் கடைக்கு வந்து தந்தை பார்த்தபோது தான் சையது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
    • கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சையது தமீமை வெட்டிக்கொன்று தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் ஆமீன் புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அமீர் அம்சா. இவரது மகன் செய்யது தமீம் (வயது 31).

    இவர் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகே அம்பை சாலையில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளையும் இவர் செய்து வருகிறார்.

    நேற்று இரவு தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செய்யது தமீம் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் அவர் கடைக்கு சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அமீர் அம்சா சந்தேகம் அடைந்து கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

    உடனே அவர் அவசரம் அவசரமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமீர் அம்சா கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செய்யது தமீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    செய்யது தமீமின் குடும்பத்திற்கு தூத்துக்குடி, கயத்தாறு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு சொத்தை விற்றுள்ளனர்.

    அப்போது அவர்களுக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இடப்பிரச்சனை தொடர்பாக அந்த கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாமா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×