search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் நடப்பது வழக்கம். ஆனால் இப்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோல் ஆயிரம் விளக்கில் உள்ள 'சியா' மசூதிக்கு இன்று 4-வது முறையாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வெடிகுண்டு சோதனை நடந்தது. சோதனை முடிவில் அவை புரளி என தெரிய வந்தது. ஆனாலும் மின்னஞ்சல் வந்த முகவரியின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

    • சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான்.
    • அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று திரும்ப போக்குவரத்துக்காக விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

    வருகிற 28-ந்தேதி (திங்கள்) முதல் 30-ந்தேதி (புதன்) வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 11 ஆயிரத்து 200 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    28 சிறப்பு ரெயில்களையும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.

    அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரிக்கும். ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருக்கிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 'ரெட் பஸ்' என்ற இணைய தளம் வழியாகத்தான் பெரும்பாலும் முன்பதிவு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் 29-ந்தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை. இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29-ந்தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயித்துள்ளார்கள். இதே போல் தான் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    இந்த கட்டண உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பற்றி புக்கிங் ஏஜெண்ட் ஒருவர் கூறியதாவது:-

    அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் சொன்னாலும் பஸ் உரிமையாளர் தரப்பில் இணையதள நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால், உண்மையில் இணைய தள நிறுவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் கொடுப்பது 10 சதவீத கமிஷன் மட்டும்தான். எனவே ஆதாரத்துடன் கட்டண உயர்வை நிரூபித்து நடவடிக்கை எடுப்பது சிரமம் தான் என்றனர்.

    டிக்கெட்டுக்கு அலைமோதுவது, கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பது போன்ற சிரமங்களால் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டங்கள் பற்றி மாற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    நண்பர்கள் சேர்ந்து வாடகைக்கு கார்களை அமர்த்தி ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டெம்போ வேன்கள் இயக்கும் ஒருவர் கூறியதாவது:-

    இங்கிருந்து நாகர்கோவில் வரை செல்ல ரூ.30 ஆயிரம் தான் வாடகை. 14 பேர் பயணிக்கலாம். இவர்கள் ஆம்னி பஸ்களில் சென்றால் 40 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மேலும் ஊருக்கு சென்ற பிறகும் ஒரு நாள் வாடகை ரூ.2,400 கொடுத்தால் வேனை தங்கள் வசம் வைத்து கொண்டு அங்குள்ள இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும். பின்னர் பண்டிகை முடிந்து ஊர் திரும்பலாம். இந்த ஆண்டு ஏராளமான வேன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    அதிலும் இப்போது 'ரெண்டல் கார்' வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை கிடைக்கிறது. பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து எந்த ரக கார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.

    ஒரு நாள் வாடகை ரூ.1,800 முதல் ரூ.5 ஆயிரம் வரை கார்களை பொறுத்து வசூலிக்கிறார்கள். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பணி செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்ற மூன்று முக்கிய ஆவணங்களின் ஒரிஜினலை கொடுத்துவிட்டு காரை எடுத்து ஓட்டி செல்லலாம். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கார் ஓட்ட தெரிந்தவர்கள் சொகுசான, வசதியான பயணத்துக்காக இந்த மாதிரி கார்களை முன்பதிவு செய்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இதை நடத்தும் தனியார் நிறுவனத்தினர் கூறினார்கள்.

    • கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • கவர்னர் வருகையை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக 56-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் கார் மூலம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் இன்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.

    இன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் ஆர்.என்.ரவி நாளை காலை சங்கரா பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் நாளை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    அதன் பின் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் 66 நக்சல் தடுப்பு பிரிவு படையினர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • பத்திரப்பதிவுகள் எதுவும் இன்று வரை ரத்து செய்ய வில்லை.
    • நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும்.

    சென்னை:

    அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளது குறித்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறைக்கும் மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பி உள்ளோம்.

    இந்த அரசு நிலம் ஜி.எஸ்.டி. சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது.

    இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்துள்ளோம். சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது.

    இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வரு வாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளோம்.

    முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளார்.

    பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

    டெக்கான் பன் ஐலேண்ட் அண்ட் ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்கு தாரர்களாகவும் உள்ளனர்.

    சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைத்து இருக்கிறோம்.

    1990-களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் பன் ஐலேண்ட் அண்ட் ஓட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது.

    கிட்டத்தட்ட 20 ஆண்டு களாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறு வனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.

    முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்று வரை ரத்து செய்ய வில்லை.

    இந்த கடிதத்திற்கு பிறகும் 2018-ல் இந்த நிலத்தை 7 லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் பன் ஐலண்ட் அண்ட் ஓட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களாக இருந்தனர்.

    கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் பல்லாவரம் தாசில்தார் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.

    ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.

    அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும்.

    இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன்படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.

    அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம்.

    இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது.

    எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை.
    • வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க ப்படவில்லை.

    புதுக்கோட்டை:

    திருச்சி-காரைக்குடி சாலை, புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிளக்கில், சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது.

    மேலும் இதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர்.

    வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாகனங்கள் விரைவாக கடந்து செல்கின்றன.

    இதனால் இங்கு போக்குவரத்து மிகவும் சீராக காணப்படுகிறது. கட்டணம் இல்லாமல் கடந்து செல்வதை பலர் காரில் அமர்ந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து பலருக்கு பகிர்ந்தனர்.

    மேலும் சிலர் சுங்க கட்டணம் முன்பு நின்று தீபாவளி வரை இந்த பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று செல்போனில் பேசி வீடியோ பதிவு செய்தனர்.

    • அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
    • 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து எடுத்து சொன்னதின் விளைவு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் வென்றோம்.

    இன்றைக்கு துணை முதலமைச்சர் பேசுகிறார். இது பைனல் மேட்ச் இல்ல என அவர் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்றார். அந்த பைனல் மேட்ச்-ல் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க. அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும்.

    வலிமையான அ.தி.மு.க.வை வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. இன்றைக்கு நம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். ஒருபோதும் நடக்காது. ஏனென்று சொன்னால் மக்கள் சக்தி எங்களிடம் உள்ளது. அவர்கள் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தி.மு.க. பலமில்லை. கூட்டணி பலத்தை தான் தி.மு.க. நம்புகிறது.

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.

    கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 11 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது.

    அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 7 சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    அதுமட்டுமல்ல 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான். 30 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. ஆண்ட காரணத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அதனால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெயரை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியது அ.தி.மு.க. அரசாங்கம்.

    தி.மு.க. அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. அதுதான் தி.மு.க.வுக்கு அடையாளம். 41 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை செய்தீர்கள்?

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியும். உயர்ந்த பதவிக்கு தொண்டன் வரக்கூடிய கட்சி அ.தி.மு.க. வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?. உங்களுடன் கிளை கழக செயலாளராக பணியை தொடங்கி உங்களுடைய பேராதரவினால் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய உழைப்பு, ஆதரவு. அத்தனை பேரும் எந்தஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தீர்கள். அதனால் இன்றைக்கு எடப்பாடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாக, எக்கு கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    வண்டலூர்:

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில்  காலநிலை பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    நடைபாதை, பூச்செடிகள், மரங்கள், சிறிய குளங்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியில் எந்தவித கட்டமைப்பு பணிகளையும் முழுமை பெறாமல் தொடங்கிய கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி  வருகிறோம்.

    அதன்படி 16 ஏக்கர் பரப்பளவில்  மக்களுக்கு பயன்படும் வகையில் காலநிலை பூங்கா ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த காலநிலை பூங்காவில் பல்வேறு வகையான செடி கொடி மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்கான குளங்களும் உள்ளன.

    மக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காகவும், குழந்தைகளின் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த பூங்கா பொது மக்களுக்கு ஒரு பொழுது போக்கான பூங்காவாக அமையும்.

    இந்த பூங்காவும், முடிச்சூர் பகுதியில் அமையும் ஆம்னி பஸ்நிலையம் ஆகிய இரண்டையும் அடுத்த மாதம் முதல் அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ெரயில் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 10 நாட்களுக்குள் நானும் இந்த மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசனும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
    • ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம்.

    நான்கு பல்கலைக்கழங்கள் மீது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    ஆவணம் தர தாமதித்தால் பல்கலைக்கழங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    குரூப் 1 தேர்வில் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விவரம் அளிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.

    பல்கலைக்கழங்கள் ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.

    இக்கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர், விஜய் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

    அரசியல் அனுபவமிக்கவர்கள், விஜய் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாநாடு பணிகள் தொடங்கிய முதல் வாரத்தில், ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் மாநாட்டு திடலினை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

    மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளனர்.

    அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து தொண்டர்கள் நடந்து தான் மாநாடு திடலுக்கு வர வேண்டு. மாநாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், துபாய், பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள், மாநாட்டு திடலில் இரு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநாட்டு திடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேடை அலங்கரிக்கும் பணியை மாநில செயலாளர் மாநில புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு உள் வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநாட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    • தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 'யூ டியூபர்' இர்பான்-ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

    இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    இதுகுறித்து மருத்துவ ஊரகப் பணிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் ராஜ மூர்த்தி கூறியதாவது:-

    குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை, இர்பான் வெளியிட்டு உள்ள நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த டாக்டர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.

    பிரசவத்தை டாக்டர் நிவேதிதா பார்த்ததாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதே போல் பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி உள்ளனர். சர்ச்சைக்கு காரணமான அந்த வீடியோவை இர்பானே நீக்கிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, தனியார் மருத்துவமனை டாக்டரிடம் விரைவில் விசாரணை நடந்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது:- தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.
    • காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடி பிடிபட்டுள்ளனர். தற்போது போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

    காவல் துறையில் ஆளும் கட்சி அதிகம் தலையிடுவது இல்லை. ஆனால் தற்போது காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதுபோன்ற நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மத்தியில், காவல் துறையை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

    சம்பவம் நடந்த உடனே வீடியோ வெளி வந்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகளை மோசமான வார்த்தைகளால் பேசி உள்ளார். காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள். தகாத வார்த்தைகளால் காவலரை பேசி உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் அவரை ஏன் உடனே கைது செய்யவில்லை. உதயநிதி பெயரை பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    போலீசாரிடம் தான் தகராறு செய்துள்ளார். அவரை உடனே கைது செய்து இருக்க வேண்டும். அவரை ஓட விட்டுவிட்டு பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து பிடித்துள்ளார்கள்.

    இப்போது எல்லாரும் எனக்கு எம்எல்ஏ தெரியும், எம்பி தெரியும், உதயநிதி தெரியும், கனிமொழி தெரியும் என்று சொல்கிறார்கள்.

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உடனடியாக களத்தில் இறங்கி காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ஒரு நாள் கழித்து இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து அதன்பிறகு பொறுமையாக சட்டத்தின் முன் நிறுத்துவதும், பல பேர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும் காவல்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பிரச்சனையே உருவாக்கும் என்று கூறினார்.

    • துர்நாற்றம் வீசினால், உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும்.
    • பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறைந்த கட்டணம், படுக்கை வசதிகள் போன்றவற்றால் இந்திய மக்கள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். கொஞ்சம் வசதி படைத்தோர் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 

    ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நிலையில்தான் ஆர்.டி.ஐ. மூலம் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் கேட்டிருந்தது.

    அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த நாளிதழ் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் பல்வேறு தூய்மைப் பணியாளர்களிடம் தகவல் கேட்டது. அப்போது நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். ஒருவேளை அதிக துர்நாற்றம் அடித்தால் அல்லது உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும். இல்லையெனில் பயணம் முடிந்த பின்னர் போர்வைகள் மடித்து அந்ததெந்த பெட்டிகளில் சுத்தமாக வைக்கப்படும் என பதில் அளித்தனர்.

    மேலும், கம்பளி போர்வைகள் துவைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுவது கிடையாது. பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    அதேவேளையில் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் ஒவ்வொரு பயணமும் முடிந்த பின்னர் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலம், வாஷிங் மெஷின்கள் ரெயில்வேக்கு சொந்தமானது. அதில் பணியும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பத குறிப்பிடத்தக்கது.

    ×