search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை.
    • வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க ப்படவில்லை.

    புதுக்கோட்டை:

    திருச்சி-காரைக்குடி சாலை, புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிளக்கில், சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது.

    மேலும் இதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர்.

    வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாகனங்கள் விரைவாக கடந்து செல்கின்றன.

    இதனால் இங்கு போக்குவரத்து மிகவும் சீராக காணப்படுகிறது. கட்டணம் இல்லாமல் கடந்து செல்வதை பலர் காரில் அமர்ந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து பலருக்கு பகிர்ந்தனர்.

    மேலும் சிலர் சுங்க கட்டணம் முன்பு நின்று தீபாவளி வரை இந்த பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று செல்போனில் பேசி வீடியோ பதிவு செய்தனர்.

    • அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
    • 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து எடுத்து சொன்னதின் விளைவு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் வென்றோம்.

    இன்றைக்கு துணை முதலமைச்சர் பேசுகிறார். இது பைனல் மேட்ச் இல்ல என அவர் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்றார். அந்த பைனல் மேட்ச்-ல் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க. அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும்.

    வலிமையான அ.தி.மு.க.வை வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. இன்றைக்கு நம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். ஒருபோதும் நடக்காது. ஏனென்று சொன்னால் மக்கள் சக்தி எங்களிடம் உள்ளது. அவர்கள் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தி.மு.க. பலமில்லை. கூட்டணி பலத்தை தான் தி.மு.க. நம்புகிறது.

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.

    கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 11 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது.

    அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 7 சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    அதுமட்டுமல்ல 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான். 30 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. ஆண்ட காரணத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அதனால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெயரை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியது அ.தி.மு.க. அரசாங்கம்.

    தி.மு.க. அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. அதுதான் தி.மு.க.வுக்கு அடையாளம். 41 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை செய்தீர்கள்?

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியும். உயர்ந்த பதவிக்கு தொண்டன் வரக்கூடிய கட்சி அ.தி.மு.க. வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?. உங்களுடன் கிளை கழக செயலாளராக பணியை தொடங்கி உங்களுடைய பேராதரவினால் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய உழைப்பு, ஆதரவு. அத்தனை பேரும் எந்தஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தீர்கள். அதனால் இன்றைக்கு எடப்பாடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாக, எக்கு கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    வண்டலூர்:

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில்  காலநிலை பூங்கா ரூ.15.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    நடைபாதை, பூச்செடிகள், மரங்கள், சிறிய குளங்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியில் எந்தவித கட்டமைப்பு பணிகளையும் முழுமை பெறாமல் தொடங்கிய கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி  வருகிறோம்.

    அதன்படி 16 ஏக்கர் பரப்பளவில்  மக்களுக்கு பயன்படும் வகையில் காலநிலை பூங்கா ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த காலநிலை பூங்காவில் பல்வேறு வகையான செடி கொடி மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்கான குளங்களும் உள்ளன.

    மக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காகவும், குழந்தைகளின் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த பூங்கா பொது மக்களுக்கு ஒரு பொழுது போக்கான பூங்காவாக அமையும்.

    இந்த பூங்காவும், முடிச்சூர் பகுதியில் அமையும் ஆம்னி பஸ்நிலையம் ஆகிய இரண்டையும் அடுத்த மாதம் முதல் அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ெரயில் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 10 நாட்களுக்குள் நானும் இந்த மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசனும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
    • ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம்.

    நான்கு பல்கலைக்கழங்கள் மீது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    ஆவணம் தர தாமதித்தால் பல்கலைக்கழங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    குரூப் 1 தேர்வில் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விவரம் அளிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.

    பல்கலைக்கழங்கள் ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.

    இக்கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர், விஜய் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

    அரசியல் அனுபவமிக்கவர்கள், விஜய் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாநாடு பணிகள் தொடங்கிய முதல் வாரத்தில், ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் மாநாட்டு திடலினை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

    மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளனர்.

    அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து தொண்டர்கள் நடந்து தான் மாநாடு திடலுக்கு வர வேண்டு. மாநாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், துபாய், பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள், மாநாட்டு திடலில் இரு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநாட்டு திடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேடை அலங்கரிக்கும் பணியை மாநில செயலாளர் மாநில புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு உள் வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநாட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    • தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 'யூ டியூபர்' இர்பான்-ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

    இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    இதுகுறித்து மருத்துவ ஊரகப் பணிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் ராஜ மூர்த்தி கூறியதாவது:-

    குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை, இர்பான் வெளியிட்டு உள்ள நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த டாக்டர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.

    பிரசவத்தை டாக்டர் நிவேதிதா பார்த்ததாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதே போல் பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி உள்ளனர். சர்ச்சைக்கு காரணமான அந்த வீடியோவை இர்பானே நீக்கிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, தனியார் மருத்துவமனை டாக்டரிடம் விரைவில் விசாரணை நடந்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது:- தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.
    • காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடி பிடிபட்டுள்ளனர். தற்போது போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

    காவல் துறையில் ஆளும் கட்சி அதிகம் தலையிடுவது இல்லை. ஆனால் தற்போது காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதுபோன்ற நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மத்தியில், காவல் துறையை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

    சம்பவம் நடந்த உடனே வீடியோ வெளி வந்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகளை மோசமான வார்த்தைகளால் பேசி உள்ளார். காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள். தகாத வார்த்தைகளால் காவலரை பேசி உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் அவரை ஏன் உடனே கைது செய்யவில்லை. உதயநிதி பெயரை பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    போலீசாரிடம் தான் தகராறு செய்துள்ளார். அவரை உடனே கைது செய்து இருக்க வேண்டும். அவரை ஓட விட்டுவிட்டு பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து பிடித்துள்ளார்கள்.

    இப்போது எல்லாரும் எனக்கு எம்எல்ஏ தெரியும், எம்பி தெரியும், உதயநிதி தெரியும், கனிமொழி தெரியும் என்று சொல்கிறார்கள்.

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உடனடியாக களத்தில் இறங்கி காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ஒரு நாள் கழித்து இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து அதன்பிறகு பொறுமையாக சட்டத்தின் முன் நிறுத்துவதும், பல பேர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும் காவல்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பிரச்சனையே உருவாக்கும் என்று கூறினார்.

    • துர்நாற்றம் வீசினால், உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும்.
    • பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறைந்த கட்டணம், படுக்கை வசதிகள் போன்றவற்றால் இந்திய மக்கள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். கொஞ்சம் வசதி படைத்தோர் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 

    ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நிலையில்தான் ஆர்.டி.ஐ. மூலம் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் கேட்டிருந்தது.

    அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த நாளிதழ் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் பல்வேறு தூய்மைப் பணியாளர்களிடம் தகவல் கேட்டது. அப்போது நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். ஒருவேளை அதிக துர்நாற்றம் அடித்தால் அல்லது உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும். இல்லையெனில் பயணம் முடிந்த பின்னர் போர்வைகள் மடித்து அந்ததெந்த பெட்டிகளில் சுத்தமாக வைக்கப்படும் என பதில் அளித்தனர்.

    மேலும், கம்பளி போர்வைகள் துவைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுவது கிடையாது. பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    அதேவேளையில் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் ஒவ்வொரு பயணமும் முடிந்த பின்னர் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலம், வாஷிங் மெஷின்கள் ரெயில்வேக்கு சொந்தமானது. அதில் பணியும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பத குறிப்பிடத்தக்கது.

    • நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல்.
    • நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் மன உளைச்சலைப் போக்கும் பணியில் ஈடுபடும் யோகா ஆசிரியர்களுக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியைப் பெற்று, அதனை கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, யோகா ஆசிரியர்களுக்கான 14 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
    • மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா இணைப்பு சாலையில் அந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. அந்த வீடியோவில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஆண்-பெண் ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைபார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.

    அப்போதுதான், அந்த மோதல் காட்சி நடந்துள்ளது. அதை வீடியோ எடுத்த சக போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சிலம்பரசன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீஸ் விசாரணையில், சிலம்பரசனிடம் சண்டைபோட்டுவிட்டு தப்பி ஓடிய ஆண்-பெண் ஜோடி யார் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் பெயர் சந்திரமோகன் - தனலட்சுமி என்று தெரியவந்தது. சந்திரமோகன் வேளச்சேரியை சேர்ந்தவர். கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமி மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் விசாரணையில், சந்திரமோகனின் தோழியாக தனலட்சுமி பழகி வந்துள்ளார். இருவரும் காரில் ஜோடியாக வலம் வந்திருக்கிறார்கள்.

    போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி சண்டை போட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் துரைப்பாக்கம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

    அப்போது, போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

    இந்நிலையில் சந்திரமோகன் குடித்துவிட்டு மெரினா சாலையில் இதற்கு முன்பும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.
    • சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார். அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே காரில் இருந்து இறங்கிய டிப்டாப் உடை அணிந்திருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் "ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். பதிலுக்கு ஏழுமலை தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் அவரை கீழே தள்ளி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் காவலாளி ஏழுமலை வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.

    இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது. பிறகு அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி வெளியேற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில், காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.


    • தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலாப் பணிகளுக்கு தொடர்ந்து 10-வது நாளாக குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை தொடர்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 10-வது நாளாக நீடித்து வருகிறது.

    தொடர்ந்து காவிரி ஆற்றிலும், அருவிகளில் குளிக்க மாவட்ட தடை விதித்து இருப்பதால், ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் மீன் விற்பனை, கடைவீதியில் பொருட்கள் விற்பனை, சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் என அனைவரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். 

    ×