search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நீக்கம்"

    • ரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

    அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் பற்றி ரகசிய விசாரணை நடத்தினார். அதில் கோழிக்கோடு ரூரல் பகுதி ஜாய் தாமஸ், கண்ணூர் ரூரல் கோகுலன், கண்ணூர் நகரம் நிசார், கோழிக்கோடு ஷிபின், கண்ணூர் கிராமம் ஷெஜிர், காசர்கோடு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    அவர்களில் ஜாய் தாமஸ், கோகுலன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார். மற்ற 5 பேரும் சிவில் போலீஸ் அதிகாரிகள் ஆவார். அவர்கள் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா உத்தரவிட்டார். கடமை தவறியது, ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேரள மாநில காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
    • காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தான் முதன் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று பிற்பகலில், தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்த போது, டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான முறையான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஷர்மிளா கூறியதாவது:-

    காலையில் கனிமொழி எம்.பி. பஸ்சில் வந்திருந்தார். அப்போது பஸ்சில் பணியாற்றிய பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

    நீங்கள் யாராக இருந்தாலும் டிக்கெட் எடுங்கள் என கூறியுள்ளார். அவர்களும் டிக்கெட் எடுத்து விட்டனர். இதனை பார்த்த நான் அவர் ஒரு எம்.பி. நீங்கள் மரியாதையாக பேச வேண்டும் என கூறினேன். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.அப்போது அவரிடம் இது தொடர்பாக தெரிவித்து கொண்டிருந்த போது, உரிமையாளர் நீ உன் விளம்பரத்திற்காக ஆட்களை கூட்டி வருவதாக தெரிவித்தார்.இது தொடர்பாக நான் ஏற்கனவே மேலாளரிடம் கனிமொழி எம்.பி வருவதை தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர் உரிமையாளரிடம் நான் சொல்லவே இல்லை என கூறி தகராறு செய்தார்.

    இதையடுத்து உரிமையாளர் எனது தந்தையிடம் உனது மகளை அழைத்து செல் என்றார். இதனால் நான் பஸ்சை விட்டு இறங்கி கொள்கிறேன் என தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
    • விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

    விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக துப்புரவு பணியாளர்களில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அவர்களை பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கை விடுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

    கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம். தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தூய்மைபணியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் இன்று காலை குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது.

    • பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் நிரந்தர பணியாளர்கள் தவிர்த்து கூடுதலாக 1,700 சுய உதவிக்குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஒரு தனியார் நிறுவனம் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வந்தது. இந்நிலையில் 1,200 பணியாளர்களை சமீபத்தில் அந்த தனியார் நிறுவனம் திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், ராமசாமி, விஜயன், ராஜன், சுந்தரி விமலா, அம்மாசி ஆகியோர் முன்னிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந்தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தங்களுக்கு மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் போராடி பெற்ற தினக்கூலி ரூ.575 என்பதை குறைத்து ரூ.500 மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், கவுன்சிலர் தாஜூதீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    நாளை முதல் மீண்டும் பணி வழங்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • அறுவை சிகிச்சை மேற்கண்டதால் தொடர்ந்து கழிவறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
    • ஒருமுறை சென்றால் சுமார் 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்வாராம்

    சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சீனாவைச் சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமனம் செய்தது. வயிற்று பிரச்சினை காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை மேற்கொண்டார்.

    அவருக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இருந்தாலும் வலி இருப்பதாக அவர் உணர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து அவர் கழிவறையில் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேலை நேரத்தின்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கழிவறைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில்தான் இருப்பாராம். இது 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்துள்ளது.

    இதை அறிந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை அவர் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்தது. அப்போதுதான் 47 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கழிப்பறையில் நேரத்தை கழித்தது தெரியவந்தது.

    வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையில்தான் இருந்துள்ளார் என்பதை அறிந்த நிறுவனம் அவரை செப்டம்பர் 23-ந்தேதி வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.

    ஊழியர்களுக்கான கையேட்டில் சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து சென்றுவிடுதல், சரியான விளக்கம் அளிக்காமல் விடுமுறை எடுத்தல் ஆகியவை வேலையில் இருந்து நீக்க தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரித்து வந்த நீதிமன்றம் நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது. மணிக்கணக்கில் கழிவறையில் இருந்தது மனித உடலியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டது என தீர்ப்பு வழங்கியது.

    8 மணி நேரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால், எந்த நிறுவனம்தான் ஒரு ஊழியரை தொடர்ந்து வேலையில் அமர்த்தும்.

    • வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • அதிகபட்ச தண்டனையாக ஏட்டு ஜெகநாதனை பணிநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த வாசுகுமார் என்பவரை, ஜெகநாதன் தனது வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்துள்ளார்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக அவர் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    காவல்துறைக்கு கெட்ட பெயர் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அதிகபட்ச தண்டனையாக ஏட்டு ஜெகநாதனை பணிநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

    • போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
    • துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது.

    ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசு துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தது.

    இதுதொடர்பாக அவ்வப்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஏனாம் அரசு பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமதுயாகூப் போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இவர் 2000-ம் ஆண்டு பி.எட். படித்ததாக சான்றிழ் அளித்துள்ளார். ஆனால் அவர் படித்த கல்லூரியில் 2003-ல் தான் பி.எட். படிப்பு தொடங்கியது என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது.

    இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2023-ம் முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காததால் கோர்ட்டு உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
    • பணியில் இருந்து நீக்கப்பட்டவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

    இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது.

    சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய அவரை பணியில் இருந்து கூகுள் நீக்கியது தொடர்பாக, ஹர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நான் ஏன்?" "திறமைக்கு இடம் இல்லையா...?" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
    • முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.

    கன்னியாகுமரி:

    காரங்காடு மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜார்ஜை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவரை பணி அமர்த்த வேண்டும் எனவும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

    குழித்துறை மறை மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மரிய சேவியர் ராஜன் தலைமை தாங்கினார். மறை வட்ட போராட்ட குழு துணை தலைவர்கள் வர்க்கீஸ், அருள்ராஜ், ராஜா டைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்ட குழு செயலர் டென்னிஸ் ஆன்றனிஸ், அருள்பணியாளர்கள் ராபர்ட், சேவியர் மைக்கேல், போராட்டக்குழு நிர்வாகிகள் கிறிஸ்டோபர், மைக்கேல்தாஸ், ஜெரோம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.

    • தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஜூம் நிறுவனம்.
    • சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

    இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.

    • தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2019-20-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ''முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    ×