search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    • இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி உள்ளது.
    • 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த கடன்கள் தொடர்பாக கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் 'வெரிட் ரிசர்ச்' என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு செய்து உள்ளது.

    இதில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருமாறி வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இலங்கை பெற்ற 968 மில்லியன் டாலர் வெளிநாட்டு கடனில், இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் கடன் வழங்கி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது
    • தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும் விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்

    புதுடெல்லி:

    உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20 என்பது என அழைக்கப்படுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைவர் பதவியை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.

    அந்த வகையில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசாங்கத் தலைவர்கள் மட்டத்திலான, ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 உறுப்பு நாடுகளுடன் ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும், சில சர்வதேச அமைப்புகளையும் அதன் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக அழைக்கும் பாரம்பரியம் உள்ளது.

    அதன்படி, ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா ஜி20 கூட்டங்களுக்கு, வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை விருந்தினர் நாடுகளாக அழைக்கிறது. மேலும், ஐஎஸ்ஏ (சர்வதேச சோலார் அலையன்ஸ்), சிடிஆர்ஐ (பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி) மற்றும் ஏடிபி (ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய அமைப்புகளையும் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக இந்தியா அழைக்கிறது.

    ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கல்வி, வர்த்தகம், திறன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, காலநிலை நிதி, பொருளாதாரம், உலகளாவிய உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், பேரழிவு ஆபத்து குறைப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, பொருளாதார குற்றங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய பகுதிகளாக விவாதிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாகிஸ்தானில் மழை-வெள்ளத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
    • கராச்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.176) ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143) விற்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தென்மேற்கு பருவமழையையொட்டி பலத்த மழை பெய்தது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையில் மழை கொட்டியது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

    கடந்த 3 மாதங்களாக மழை பெய்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 110 மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் மழை-வெள்ளத்தால் சுமார் 3 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1061 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டு வந்த நிலையில் முதல் முறையாக கடற்படையும் களம் இறக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மந்திரி ஷெர்ரி ரஹ்மான் கூறும்போது, "பாகிஸ்தானில் இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள், கடலின் ஒரு பகுதிகளாக காட்சி அளிக்கின்றன.

    ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொருட்களை வீசுவதற்கு கூட இடங்கள் காணப்படவில்லை" என்றார்.

    மழையால் இதுவரை ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை-வெள்ளத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    கராச்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.176) ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143) விற்கப்படுகிறது.

    இதற்கிடையே இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யப்படுவதால் வரத்து குறைவாக உள்ளது.

    • துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 2-வது 'லீக்' போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளைய போட்டி இரு நாட்டு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்

    விராட் கோலி தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. இதனிடையே, இந்த போட்டியின் முடிவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. இதனால் நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மிகப்பெரிய பலமாக இருப்பார். அதே நேரத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப் படுகிறது.  20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் நாளை 10வது முறையாக மோத உள்ளன. இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 7-ல், பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.  

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யுசுவேந்திர சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்

    பாகிஸ்தான்: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பகர் ஜமான், ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவூப், முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாநவாஸ் தானி, உஸ்மான் காதிர். 

    • வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது குறித்து விவாதம்.
    • நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.

    இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டின் நீர் வளத்துறை மந்திரிக ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். பங்களாதேஷ் நீர் வளங்கள் துணை மந்திரி இனாமுல் ஹோக் ஷமீமும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

    இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரை பகிர்வது, வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சனையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் இந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன.

    கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய-வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன. நிகழ்கால வெள்ள தரவுகளை இந்தியா வங்கதேசத்துடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் மாணவர்கள் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது.
    • இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியது பெரிய அளவு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், வடக்கு லண்டனில் கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    ஆப் சப் மேரே பரிவார் ஹோ (நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்று அவர் இந்தி மொழியில் உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் வணிகத்திற்கான இங்கிலாந்தின் வாய்ப்பைப் பற்றி நாங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் உண்மையில் நாம் அந்த உறவை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும், ஏனென்றால் இங்கிலாந்தில் உள்ள நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடியது பெரிய அளவு உள்ளது.

    எங்கள் மாணவர்களும் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது என்பதையும், எங்கள் நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் ஒன்றாகச் செயல்படுவதும் எளிதானது என்பதையும் நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் இது ஒரு வழி உறவு மட்டுமல்ல, இது இரு வழி உறவு. அந்த உறவில் நான் கொண்டு வர விரும்பும் மாற்றமும் அதுதான்.

    சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. சந்தேகமே வேண்டாம், உங்கள் பிரதமராக நான் உங்களையும், உங்கள் குடும்பங்களையும், நமது நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வேன், ஏனெனில் அது ஒரு பிரதமரின் முதல் கடமை. இவ்வாறு ரிஷி சுனக் குறிப்பிட்டார்.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது.
    • இந்தியாவுடனான சீனாவின் உறவு கடினமான கட்டத்தில் உள்ளது.

    சாவ் பாலோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: 

    இந்தியா – பிரேசில் இடையே சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறந்த இணைப்புப் பாலமாக திகழும் இந்திய வம்சாவளியினருக்கு நன்றி.

    உறவு ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது, அதைத் தக்க வைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். சீனா அண்டை நாடு, ஒவ்வொருவரும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறார்கள்.

    இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளுடனான உறவில் கறை படிந்த நிழல் போல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.
    • வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக இந்திய ராணுவத்துடன் பயிற்சி மேற்கொண்டது.

    சந்திமந்திர்:

    இந்தியா-வியட்நாம் இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திர் ராணுவ தளத்தில் தொடங்கியது.

    வியட்நாமின் ராணுவம், இந்திய ராணுவத்துடன் மேற்கொண்ட முதல் பயிற்சி இதுவாகும். ஐநா அமைதி பாதுகாப்பு குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.

    வின்பேக்ஸ் என அழைக்கப்படும் இந்த பயிற்சியின் போது, பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப் படுத்தப்பட்டன.

    இரு நாட்டு வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. இன்று நடந்த பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 

    • இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
    • இன்றைக்கு இந்தியா ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

    புதுடெல்லி :

    மத்திய செலவினத்துறையின் கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ் 'இந்தியாவின் தடுப்பூசிகள் வளர்ச்சி கதை' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். டெல்லியில் நேற்று இந்த புத்தகத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகளவில் பயன்படுத்தப்படுகிற அனைத்து தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுபவை ஆகும். பல பத்தாண்டுகளில் உலகளவில் தடுப்பூசி வினியோகத்தில் இந்தியா சிறப்பான பங்களிப்பை தனி ஒரு நாடாக செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    இன்றைக்கு இந்தியா ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக அந்த அளவுக்கு அதிகமாக தடுப்பூசிகளை தயாரிப்பதும், அவற்றை போடுவதும் எளிதான ஒன்று அல்ல.

    பொது முடக்க காலத்திலும்கூட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்தது. உலகளவில் நமது நாடு தடுப்பூசிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பது இந்தியாவின் மரபணுவில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 208 கோடியே 57 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
    • சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது.

    பாங்காக் :

    சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதுதொடர்பான கவலைகளை இந்தியா தெரிவித்ததால், கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அதனால், கடந்த 11-ந் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16-ந் தேதி வந்து சேர்ந்தது.

    இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை இலங்கை அரசு விதித்து இருப்பதாக தெரிகிறது.

    22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இந்தநிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம்.

    இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம். இதை ஏற்கனவே எங்கள் செய்தித்தொடர்பாளர் சொல்லி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, சீன உளவு கப்பலின் கேப்டன் ஜாங் ஹாங்வாங் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். பன்னாட்டு கப்பல்கள் வந்து செல்லும் சர்வதேச துறைமுகம் என்ற முறையில், சர்வதேச நடைமுறைப்படி, தேவையான உதவிகளை இந்த துறைமுகம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

    சீன கப்பலின் வருகையால், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா-இலங்கை இடையிலான தொடர்பு வலுப்படும். இரு நாடுகளின் மக்கள் இடையிலான நட்புறவு மேலும் வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான்சன் லியு கூறியதாவது:-

    இலங்கை அரசும், இலங்கை துறைமுக ஆணையமும் அனுமதிக்கும் பன்னாட்டு கப்பல்களை இந்த துறைமுகம் வரவேற்று வருகிறது. கடந்த மாதம் வரை, நூற்றுக்கணக்கான எண்ணெய், எரிவாயு கப்பல்கள், சுற்றுலா கப்பல்கள். படகுகள் ஆகியவை வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு.
    • இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

     அண்டனானரிவோ:

    இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டி சென்று இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  


    மேலும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திய தூதர் அபய் குமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×