search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226128"

    • மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • மின்சாரம் தயரிப்பதற்காக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வுக்கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி, மின்வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் பங்கேற்றனர்.

    இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் மறுசுழற்சி செய்ய முடியாத மட்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயரிப்பதற்காக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை ரூ. 350 கோடியில் அமைக்கப்படும். தினமும் 14 லட்சம் கிலோ குப்பைகளை பயன்படுத்தி 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதில் கிடைக்கும் மின்சாரத்தை மாநகராட்சி அலுவலகங்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

    இந்த மின் உற்பத்தி ஆலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிபுணர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி பெற்று டெண்டர் கோரப்படும். பின்னர் மின் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி,2-வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை தரம்பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நடைபெறும் இடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள், குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பெரம்பலூர்:

    அரியலூர்-பெரம்பலூர் சாலையின் மத்தியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு தினமும் மாலை எரியூட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதோடு இதனை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டி எரிப்பதனால் மக்கும் குப்பைகளும் வீணாகிறது. நிலமும், காற்றும் மாசடைகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை முறையாக பெற்று மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதோடு மக்காத குப்பைகளை முறையாக கையாள குன்னம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
    • இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.

    தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் அமைந்துள்ளன.
    • மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் ஏராளமான நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் இதர தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்தநிலையில் வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் சாக்கடைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் அவதி அடைகின்றனர். சாக்கடைகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாக்கடைகளில் தேங்கி நிற்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கழிவு மற்றும் மழைநீர் ஓடும் வகையில் வழிவகை ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

    • தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படு வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அருகே கொட்டப்படும் குப்பைக ளால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதோடு இதுபோன்று திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரத்தின் சுற்றி குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
    • புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டின் கீழ்புறம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் தீ வேகமாக பரவி பழமை வாய்ந்த புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, ராஜேந்திரன், விவேகானந்தன் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    • சாலைகளில் குப்பைகளை சிதறவிட்டு செல்லும் மாநகராட்சி லாரிகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நாள்தோறும் 100 டன் குப்பைகளை சேகரித்து மாநகராட்சி 92-வது வார்டு பகுதியில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் குப்பைகள் சுத்தரிக்கும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

    இந்த குப்பைகள் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அந்தத் தொட்டியில் குப்பை களை கொட்டியும் மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு அதனை அந்தந்த வார்டுகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வந்து சேர்க்கின்றனர். இந்த குப்பைகளை எல்லாம் மாநகராட்சி குப்பை லாரிகள் மூலமும், டிராக்டர் மூலமும் கொண்டு செல்லப்படுகிறது.

    இவ்வாறு கொண்டு செல்லும் குப்பை லாரிகள், டிராக்டர்கள் ஓரிடத்தில் அள்ளிய குப்பைகளை வீதி எங்கும் சிதறவிட்டும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு குப்பைகளை காற்றில் பறக்க விட்டும் செல்கின்றன. இதனால் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறியும் எந்த பலனும் இல்லாத நிலையில் தான் இருக்கிறது. மேலும் இந்த குப்பை களை கொண்டு சேர்க்கும் குப்பை லாரிகள் காண்ட்ராக்டர் மூலம் எடுத்து செல்வதால் காண்ட்ராக்டர்கள் அதிக குப்பைகளை கொண்டு சென்றால் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக லாரி மற்றும் டாக்டர்களில் குப்பைகளை எடுத்துச் செல்வதினாலும் குப்பைகள் இப்படி வீதி களில் சிதறி விழுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன. குப்பைகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன.

    இது போதாதென்று சேகரிக்கும் குப்பைகளை சாலை முழுவதும் சிதறவிட்டுச் செல்கின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
    • சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் ரோட்டில், அம்மாபாளையம் பிரிவு அருகே ரோட்டோரங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;- ரோட்டோரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை வெளியே உள்ளவர்கள் இங்கு வந்து கொட்டிச் செல்கின்றனர். இங்குள்ளவர்கள் யாரும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது இல்லை, அருகே உள்ள புதிய குடியிருப்புகளில் வந்தவர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களில் வந்து இரவு நேரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.

    சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.மேலும் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
    • பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுங்குவார் சத்திரத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

    ஊராட்சியில் பல பகுதிகளில் இது போல ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றமல் அலட்சியம் காட்டுகிறது. பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×