search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
    • இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம்.
    • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

    டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நேரந்திர மோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.

    பிறகு உரையாற்றிய அவர், உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

     


    இதோடு கடந்த 2021-ம் ஆண்டு வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நேற்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் விழா புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். 



    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.
    • பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலி க்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது.

    • ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
    • ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.

    ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.

    இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

    ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
    • விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

    இதனால் புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் வெளிமாநில மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

    தனியார் ஒட்டல்கள், விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

    விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    • கிறிஸ்துமஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம்.
    • கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவு கூருகிறோம்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.

    கிறிஸ்துமஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம், மேலும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்தை நோக்கிச் செயல்படுவோம்.

    கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவு கூருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
    • இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம்...

    சென்னை :

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சகிப்புத்தன்மை

    சகமனிதனை மதித்தல்

    தன்னுயிர் போலவே

    மண்ணுயிர் பேணுதல்

    என்பனவெல்லாம்

    நீதி மொழிகள் அல்ல;

    ஏசு பெருமான்

    வாழ்ந்து காட்டிய

    வாழ்வியல் நெறிகள்


    இந்த நெறிகளை

    மதம் சார்ந்தும் வாழலாம்;

    மதம் கடந்து

    மனம் சார்ந்தும் வாழலாம்


    தத்துவம் தந்த

    உத்தமர் பிறந்தநாள்

    வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல

    வாழ்வதற்கும்


    இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் தொடர்பாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

    உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள், மேலும் அந்த நாள் மக்களின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை மற்றும் இருளை அகற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். 

    கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடவுளின் மகனாகக் கருதும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இயேசு பாவிகளை இரட்சிக்க பூமிக்கு மனிதனாக வந்தார் என்று கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இருப்பினும், "இயேசு பிறந்த நாளாக டிசம்பர் 25ஐ பைபிள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை; மாறாக, இயேசுவின் தாயான மரியா, இறைவனிடமிருந்து ஒரு சிறப்பு குழந்தையைப் பெறுவார் என்று கூறப்பட்டது. 

    அன்னை மேரி இந்த தீர்க்கதரிசனத்தை மார்ச் 25 அன்று பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று, இயேசு பிறந்தார் என்றும் கருதப்படுகிறது. இந்த தேதிகள் பாரம்பரியமானவை; இயேசு எப்போது பிறந்தார் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது.

    இதைப்போல நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிறிஸ்துமஸ் உண்மைகள்:

    •"Dashing through the snow" என்பது ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடலின் முதல் வரி அல்ல. அவரது தேவாலயத்தில் நடந்த நன்றி விழாவின் போது, ஜேம்ஸ் லார்ட் பியர்பான்ட் "One Horse Open Sleigh" என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றி அதை நிகழ்த்தினார். இன்றும் நன்கு அறியப்பட்ட கிறிஸ்துமஸ் கரோலாக இருக்கும் இந்தப் பாடல், 1857 இல் இப்போது பாடப்படும் தலைப்பின் கீழ் மீண்டும் வெளியிடப்பட்டது. 

    •ஜெர்மனியின் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி விக்டோரியா தி கிரேட்டுக்கு வசந்த காலத்தையும் பசுமையையும் கொண்டு வர விரும்பினார். அதற்கு அவரிடமிருந்து கிடைத்த பரிசு இந்த மரம். அப்போதுதான் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் தொடங்கியது. 

    •பாதிரியார் நிக்கோலஸ் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை விடுவிப்பதற்காகப் போராடினார். மேலும் தனது பரம்பரை சொத்து அனைத்தையும் பின்தங்கியவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏனெனில் அந்த நேரத்தில், அவரது நடத்தை பற்றிய வார்த்தை பரவலாகப் பேசப்பட்டது. பின்னர் டச்சுக்காரர்கள் அவருக்கு "சின்டர் கிளாஸ்" என்று பெயரிட்டனர். அதிலிருந்து இப்போது பெயர் "சாண்டா கிளாஸ்" என மாற்றப்பட்டுள்ளது. 

    •கோகோ கோலா நிறுவனம் முதலில் சான்டாவின் படத்தை வெளியிட்டபோது, அது கொஞ்சம் பயமாக இருந்தது. எனவே, 1931 ஆம் ஆண்டில், ஒரு ஓவியரான ஹாடன் சன்ட்ப்லோம் என்பவரை பத்திரிகை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்காக சான்டாவின் ஓவியத்தை கோகோ கோலா நிறுவனம் உருவாக்கியது. அவர் மகிழ்ச்சியான சாண்டாவை சித்தரிக்கிறார்.

    •கிறிஸ்துமஸின் போது நாம் பரிசுகளை வழங்குவதற்கான காரணம், மூன்று ஞானிகள் இயேசுவுக்கு வழங்கிய பரிசை அடையாளப்படுத்துவதாகும். கிறிஸ்துமஸின் போது பரிசு வாங்குவதை விட பரிசு கொடுப்பதே அதிகமாக பேசப்படுகிறது.

    எனவே, கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் வாழ்த்துகள் கூறுவதை விட நன்றிகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்வதே உண்மையான அடையாளம்.

    • ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையும் வர இருக்கிறது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக சொந்த ஊர் செல்ல புற்ப்பட்டு வந்தவர்கள் ஆம்னி பஸ்களை நாடினார்கள்.

    இதை கருத்தில் கொண்டு நேற்று திடீரென்று ஆம்னி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு பஸ்களில் இருக்கைகள் ஏற்கெனவே நிரம்பி விட்டதால் நேரடி பஸ்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மதுரை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,000 வசூலிக்கப்பட்டது. வழக்கமாக நெல்லைக்கு ரூ.2,000 கட்டணம் ஆகும். ஆனால் ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    இதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,100 வரை வசூலிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாகும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பலர் ஊருக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால், மக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு என்று வரும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் கூறுகையில், ' ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். கூடுதலாக வசூலித்த உரிமையாளர்களிடம் இருந்து பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.

    ×