search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்"

    பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

    அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.
    திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் போலி ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு காவல் நீட்டித்தும் பெண் உதவியாளருக்கு ஜாமீனில் விடுதலையும் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண்களை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட போலி ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம், கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு 3-ந் தேதி நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக 2-வது வழக்காக அருள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்த வழக்கிற்காக சிறையில் இருந்த வக்கீல் அருளை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வக்கீல் அருளை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே போலியான ஆடியோ வெளியிட உடந்தையாக இருந்ததாக கைதான கலையரசி தரப்பினர், அவருக்கு ஜாமீன் கேட்டு பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவினை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் கலையரசிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து கலையரசி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் அருளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
    2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    சென்னை:

    இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்த போராட்டத்தின் போது, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் மீது போராட்டக்காரர்கள் சிலர் அழுகிய முட்டையை வீசி தாக்குதல் நடத்தினர். ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகளின் கண் எதிரே இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயற்சித்தனர்.

    அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. ஐகோர்ட்டுக்குள் ஆயுதப்படை போலீசார் உள்ளே நுழைந்து நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். இதில் நீதிபதிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தால், சென்னை ஐகோர்ட்டு பல நாட்கள் இழுத்து மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முகோபாத் தியாயா தலைமையிலான முதல் அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்திய பின்னர், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீதும், 4 ஆயுதப்படை போலீசார் மீதும் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த புலன்விசாரணை பாரபட்சமாக உள்ளதாக கூறி, வக்கீல்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த தடை உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி. சென்னை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வக்கீல்கள் அனைவரும் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று சசிகலாவின் வக்கீல் அசோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில், சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கொடுத்து தனி அறைகள், தேவைப்படும் போதெல்லாம் ஷாப்பிங், வேலைக்கு ஆட்கள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த பெண் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    இதையடுத்து சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு, சிறை கைதி உடையின்றி சாதாரண உடையில் உள்ளே வருவது போல் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் அறிக்கையை வழங்கியது. ஆனால், அரசு அந்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

    அந்த அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சசிகலாவுக்கு பல சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது, உண்மைதான் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், சசிகலாவின் வக்கீல் அசோகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. முதலாவதாக, சிறையில் சொந்த உடை அணிந்து வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர் சாதாரண தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். கடுங்காவல் தண்டனை அளிக்கப்படவில்லை.

    எனவே, கர்நாடக சிறை சட்ட விதியில் சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடையை உடுத்திக் கொள்ளலாம் என்று தெளிவாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ‘ஏ’ கிளாஸ் கைதிகளின் சட்ட விதிகளை மட்டும் படித்துவிட்டு, கர்நாடக சிறையின் விதியை படிக்காமல் இப்படி குற்றம் சாட்டுகிறார்.

    2-வது குற்றம் சசிகலா வெளியே சென்று வருவதாக வெளியான வீடியோ. அது வெளியே சென்று வரும் வீடியோ இல்லை. சிறைக்குள் பார்வையாளர்களை சந்தித்துவிட்டு செல்லும் வழி. எனவே வெளியான வீடியோவில் வரும் காட்சி அவர் என்னை சந்தித்துவிட்டு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வாங்கிக் கொண்டு சிறைக்குள் செல்கிறார். ஆனால் இந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக யாரோ ஒருவருடைய தூண்டுதலின்பேரில் வெளியிட்டு உள்ளனர். இது பொய்யான வீடியோவாகும்.

    மேலும், அதிகாரி ரூபா வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் வரம்பை மீறி செயல்படுகிறார். மீடியாவை சந்திக்கிறார். அரசியல்வாதிகளுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.

    ரூபா மீது நாங்கள் அவதூறு வழக்கு தொடர உள்ளோம். அவர் யார் தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார் என்றும் எங்களுக்கு தெரியும். அதனை நாங்கள் நேரம் வரும்போது வெளியிடுவோம். அரசிடம் இருந்து அறிக்கையும் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை.

    வீடியோவில் வரும் காட்சி சிறையின் உள்ளே உள்ள காட்சி தான். வெளியே உள்ள கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. ஏனென்றால் சசிகலா வெளியே செல்லவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

    ஐகோர்ட்டு பற்றி விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணத்தில் வக்கீல் சங்க தலைவர் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. #HRaja #BJP
    கும்பகோணம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசார் , கூட்டம் நடத்த தடை விதித்ததால் எச்.ராஜா ஆவேசமடைந்து காவல்துறை மற்றும் ஐகோர்ட்டை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    அவரது ஆவேச பேச்சு இணைய தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து விமர்சித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. #HRaja #BJP
    ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் வக்கீல், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கோவை:

    கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.
    வக்கீல் மீது தாக்குதல் நடத்தியது குறித்த வழக்கில் மற்றொரு வக்கீலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 27) வக்கீல். இவர் 20-5-2004 அன்று விபத்தில் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோப்புக்கொல்லையை சேர்ந்தவர்களை பார்த்து விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அவரை கடலூர் வக்கீல் சந்திரசேகரன் வழிமறித்து திட்டி மிரட்டியதாகவும், இதை தடுக்க முயன்ற தோப்புக்கொல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கையில் பேனா கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வக்கீல் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து, அவர் மீது கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அன்வர் சதாத் தீர்ப்பளித்தார். #tamilnews
    நண்பரின் மனைவியிடம் நெருங்கி பழகி அதனை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு வக்கீல் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதி வடக்கு கோட்டையை சேர்ந்தவர் சேகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதி வெள்ளூரை சேர்ந்தவர் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தேவி பி.எஸ்.சி பே‌ஷன் டெக்னாலஜி படித்தவர்.

    இருவரது காதல் திருமணத்துக்கு சேகரின் நண்பரும், வக்கீலுமான அன்பரசன் என்பவர் உதவியுள்ளார். அன்பரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

    இந்நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே சேகர் வேலை தேடி லண்டன் சென்று விட்டாராம்.

    இந்த நிலையில் கணவர் வெளிநாடு சென்றதால் தேவி வெள்ளூரில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். வக்கீல் அன்பரசன் அவ்வப்போது தேவியிடம் போனில் பேசி வந்ததால் இருவரும் நெருக்கமாகினர்.

    பின்னர் தேவியை சென்னைக்கு வரவழைத்த அன்பரசன் அங்கு ஒரு அழகு நிலையத்தில் வேலை வாங்கி தந்ததோடு அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். இதில் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து சென்னையிலேயே தேவிக்கு தனியாக அழகு நிலையம் அமைத்து கொடுத்த அன்பரசன் தனது கட்டுப்பாட்டில் தேவியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் புதுச்சேரி, திருப்பதி போன்ற இடங்களுக்கு தேவியை அழைத்து சென்று நெருக்கமாக இருந்தபோது தேவிக்கு தெரியாமல் அதனை செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டாராம். ஒரு கட்டத்தில் தனக்கு பணம் தேவை என்று கூறி தேவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்ததை அன்பரசன் படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்த தேவி பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவி தனது சொந்த ஊரான வெள்ளூருக்கு வந்து தனது குடும்பத்தாரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அன்பரசன் கடந்த மாதம் 12-ந்தேதி வெள்ளூருக்கு வந்து நான் உனக்கு செலவு செய்த பணம் ரூ.2½ லட்சத்தை திருப்பி கொடு. இல்லை என்றால் இந்த ஆபாச படம் மற்றும் வீடியோவை உனது கணவருக்கும், இணைய தளத்திலும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த தேவியின் உறவினர்கள் அன்பரசனிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்து அதில் இருந்த சிம் கார்டுகளை எடுத்துக் கொண்டனராம். இதையடுத்து பாப்பாநாடு போலீசில் அன்பரசன் புகார் கொடுத்தார். இதேபோல் தேவியும் பாப்பாநாடு போலீசில் தன்னை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.

    ஆனால் புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இதுபற்றி அவர் தஞ்சை டி.ஐ.ஜி, எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் தேவியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அன்பரசனிடம் நெருக்கமாக இருந்ததை தேவிக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதனை செல்போனில் மட்டுமல்லாது தனது லேப்-டாப்பிலும் பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடி வருவதை தெரிந்து கொண்ட அன்பரசன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். #tamilnews
    ஆர்டர்லி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதாக டி.ஜி.பி. பொய் சொல்வதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இப்போதும் ஆர்டர்லிகளாக 4 போலீஸ்காரர்கள் பணி செய்கின்றனர் என்றும் ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. பதில் மனுவை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் வீட்டில் இப்போதும் 4 போலீஸ்காரர்கள் ‘ஆர்டர்லி’ வேலை செய்கின்றனர் என்று கூறி பெயர், புகைப்பட ஆதாரத்துடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், போலீஸ்காரர்களுக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவுக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக போலீசாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? இதில் வித்தியாசம் உள்ளதா? அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது போல, போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறையும், மற்றொரு நாள் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியமும் வழங்கினால் என்ன? இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது, அண்மையில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்கு முந்தைய ஆட்சியில், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கைதியை அமைச்சர் நேரில் சென்று பார்த்த சம்பவம் நடந்தது. அரசியல்வாதிகள், இதுபோன்று ரவுடிகளை ஊக்குவிப்பதால் தான் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். 
    வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது. #Vaiko #ThoothukudiCourt
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக கடந்த 6-ந் தேதி ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது அங்கு இருந்த சில வக்கீல்கள் வைகோவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வக்கீல்களுக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் வக்கீல் ஜெகதீஷ்ராம் என்பவர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் தூத்துக்குடி பூபாலராயர்புரம் 1-வது தெருவில் குடியிருந்து வருகிறேன். தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறேன். நான் ரஜினிகாந்த் மீது பற்று கொண்டவர் என்பதால், கடந்த 30-5-18 அன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துடன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதனை பலரும் பார்த்து உள்ளனர். அதே போன்று ம.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்று மதியம் 2.30 மணிக்கு நான் நீதிமன்ற பணிகளை முடித்து விட்டு வக்கீல்கள் ஓய்வுக்காக அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜராகிவிட்டு வெளியே வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உத்தரவின் பேரில் அவருடன் வந்தவர்கள் என்னை இரும்பு கம்பிகள் மற்றும் அங்கு கிடந்த நாற்காலிகளால் தாக்கினர். அங்கு இருந்த சக வக்கீல்கள் என்னை, அவர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது சம்பந்தமாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிரிகள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேற்படி எதிரிகள் என்னை ஆபாசமாக திட்டி, அடித்து, கொலைமிரட்டல் விடுத்து, கொலை செய்ய முயற்சித்து, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 147, 148, 294(பி), 323, 324, 307, 506(2)-ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்து உள்ளனர். ஆகையால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை விசாரித்த முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தென்பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார். #Vaiko #ThoothukudiCourt
    ×