search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98579"

    • பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
    • குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குபட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குள் உள்ளன. இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோவிலுக்கு சிலர் வழிபட சென்றபோது கோவிலின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாக படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோயில் முகப்பில் படுத்து இளைப்பாறும் குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • சிறுத்தையை கூண்டில் சிக்க வைப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது.
    • கேமரா காட்சியின் அடிப்படையில் காப்புக்காட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மேய்ச்சலில் இருந்த ஆடு மற்றும் வளர்ப்பு நாய்களை தாக்கியது. வனத்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட கேமரா, 4 கூண்டு வைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சிறுத்தையை கூண்டில் சிக்க வைப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

    மாறாக ஊதியூர் காப்புக்காட்டில் சிறுத்தை தஞ்சம் புகுந்தது. 930 ஏக்கர் பரப்பளவிலான அந்த காட்டில் மான், குரங்கு உள்ளிட்ட சிறிய விலங்கினங்கள் அதிக அளவில் உள்ளன. அவ்வப்போது காப்புக்காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை குடியிருப்பு பகுதியில் கால்நடைகளை தாக்குகிறது.

    சிறுத்தை நடமாட்டத்தால் ஊதியூர் மலை மீதுள்ள கோவில்களுக்கு மாலை நேரங்களில் பக்தர்கள் சென்று வருவதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும். அல்லது அப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை தூக்கி சென்றது. இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி பொதுமக்கள் சிறுத்தையை விரைவாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து கோவை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம், ஊதியூர் காப்புக்காடு பகுதியை பார்வையிட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காங்கயம் ரேஞ்சர் தனபால் மற்றும் வனத்துறையினர் விளக்கினர்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கேமரா காட்சியின் அடிப்படையில் காப்புக்காட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆண் சிறுத்தைக்கு 7 வயது இருக்கும். ஆரோக்கியத்துடன் உள்ளது. காட்டுக்குள் உள்ள மான், குரங்கு ஆகியவற்றை உணவாக்கி கொள்கிறது. அதற்கான தண்ணீரும் கிடைப்பதால் அங்கேயே தஞ்சமடைந்துள்ளது.

    சிறுத்தையுடன் பெண் சிறுத்தை ஏதேனும் உள்ளதா, அதனால் இனப்பெருக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் கண்காணித்தோம். ஆனால் சிறுத்தை தனியாக தான் இருக்கிறது. காப்புக்காட்டில் இருந்து அதிகபட்சம் 700 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வந்து செல்கிறது. இடைப்பட்ட 100 மீட்டரில் குடியிருப்பும், அதையொட்டி பட்டியும் இருப்பதால் கால்நடைகளை அடித்து விடுகிறது.கூண்டில் சிக்க வைப்பது அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் அதற்காக ஆலோசித்து வருகிறோம் என்றனர்.

    • ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது.
    • மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூா் வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடிக்க வலியுறுத்தி காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளா் முத்துவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் காங்கயம் வட்டம், ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப் பகுதிக்குள் நுழைந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளனா். எனவே வனத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். 

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 15 நாட்களுக்கு மேலாக சிறுத்தை குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.
    • 3 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மாயமாகி உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. கூண்டுக்குள் ஆடுகளை வைத்து சிறுத்தைைய சிக்க வைத்து விடலாம் என்று கணக்கு போட்டனர். ஆனால் அது தப்பு கணக்கு என சிறுத்தை சிக்காமல் ஆட்டம் போடுகிறது. ஆடு, மாடு, நாய் என அடுத்தடுத்து தூக்கி சென்ற சிறுத்தை எங்கு இருக்கிறது என தெளிவாக தெரியவில்லை. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

    இந்தநிலையில் 15 நாட்களுக்கு மேலாக சிறுத்தை குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் ஊதியூர் - குண்டடம் சாலையில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செம்மறி ஆட்டுப்பட்டியில் 3 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மாயமாகி உள்ளது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆடுகளை சிறுத்தை தூக்கி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவானது உறுதி செய்யப்பட்டதால் சிறுத்தைதான் வேட்டையாடியது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்டுக்குட்டிகளை தூக்கி சென்ற பகுதிகளில் தற்போது கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது
    • சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவது சமீபகாலமாக தொடா்ந்து வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் காவல் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
    • கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் கடந்த 1½ மாதமாக சிறுத்தை பதுங்கியிருந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    ஒரு மாதத்திற்கு மேலாக சிறுத்தை பிடிக்கப்படாத நிலையில் ஊதியூர் பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சிறுத்தையை பிடிப்பதற்கான தொடர் முயற்சியில் வனத்துறை சார்பில் 20 வனத்துறை பணியாளர்கள் , 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 3 பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேமராக்கள், கூண்டுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் சிறுத்தை பிடிபடவில்லை.

    மேலும் சிறுத்தை மலையடிவார பகுதியில் பதுங்கி உள்ளதா அல்லது இடம் பெயர்ந்து சென்று விட்டதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் வனத்துறை பணியாளர்கள் நேற்று ஊதியூர் மலைப்பகுதியில் ரோந்து சென்ற போது கொங்கண சித்தர் குகை அருகே சிறுத்தை அமர்ந்துள்ளதை பார்த்தனர். அப்பகுதியில் குரங்குகள் அதிகமிருப்பதால் அவற்றை வேட்டையாட வந்திருக்கும் என தெரிகிறது.

    கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தை ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி கொங்கண சித்தர் குகை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட செல்வார்கள். சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மேய்ச்சலுக்கு வந்த மாட்டை சிறுத்தை கொன்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ்.

    இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை ஒன்றை வனப்பகுதியினுள் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி இழுத்து சென்றுள்ளது.

    பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது அங்கு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை, பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிந்தராஜ் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காரமடை வனத்து றையினர், அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் வைத்து பசு மாட்டினை சிறுத்தை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுவை ஆய்வு செய்த போது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் காங்கயம் ஊதியூர் பகுதியில் கடந்த மாதம், 3ந் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை பிடிபடவில்லை. இந்நிலையில் கலெக்டர் வினீத், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காங்கயம் ஆய்வு மாளிகையில் நடந்தது. அதன்பின் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:- பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால் தடத்தின் அளவுகளை வைத்து சுற்றித்திரிவது 6 முதல் 7 வயதுடைய சிறுத்தை. அதனை பிடிக்க நான்கு கூண்டுகள் வைக்கப்பட்டு ள்ளது. 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம், கபில்மலை இருகூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. அங்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரூர் அத்திக்காடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் வந்தது.

    அங்கும் கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் தற்போது திருப்பூர், காங்கயம் ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வரத்து உள்ள பகுதியில் தான் சிறுத்தை நடமாடும். இரையை தேடி நகரும் சிறுத்தை திரும்ப, திரும்ப வனப்பகுதிக்கே சென்று விடும். இதுவரை மனிதர்களை தாக்கவில்லை.சிறுத்தையால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். வனத்துறை சார்பில் 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும், 3 பழங்குடியின மக்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும், அல்லது வனப்பகுதிக்கு விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வை க்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கேயே பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர்-காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்–பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர், அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கூண்டுக்கு அருகே கூட சிறுத்தை வரவில்லை.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கூண்டுகளில் வைக்கப்பட்ட இறைச்சிகளை சிறுத்தை வந்து சாப்பிடவில்லை. வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது. ஒருவேளை ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான் கூட்டங்களை சாப்பிட்டு வரலாம். ஊதியூர் பகுதியில் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தெருநாய்களை சிறுத்தை வேட்டையாடி வரலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் காரணமாக கூண–டுகளில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை சாப்பிட சிறுத்தை வராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடியதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில் ஊட்டி மிஷ்னரி ஹில் புதிய ரேஷன் கடை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஊட்டியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது வீட்டில் சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்த நாயை வேட்டையாடி விட்டு சென்றது.

    இந்தநிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, சங்கிலியால் கட்டி போட்ட நாய் வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடி உள்ளதால், அப் பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்து, வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.

    • காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது.
    • காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது.

    டுவிட்டரில் தி பிகென் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. அதாவது, காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது. அப்போது அந்த பல்லி தனது வாலை சுழற்றி பளார் என சிறுத்தைக்கு ஒரு அறை கொடுக்கிறது. இதனால் சிறுத்தை அதிர்ச்சியடைவது வீடியாவில் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

    ×