செய்திகள்

மிளகாய்பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருட்டு

Published On 2018-05-13 17:49 GMT   |   Update On 2018-05-13 17:49 GMT
மத்திகிரி அருகே முகத்தில் மிளகாய் பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்திகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு காந்திநகரை சேர்ந்தவர் ரோகித்கோயல் (வயது 42). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக காரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரிக்கு வந்தார்.

மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் காரை வழிமறித்தார். இதனால் ரோகித்கோயல் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த மர்ம ஆசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ரோகித்கோயலின் முகத்தில் தூவினார்.

இதனால் அவர் அலறி துடித்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர் காரில் இருந்த ரூ.3 லட்சம், மடிக்கணினி, 3 செல்போன்கள் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ரோகித்கோயல் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் அதிபரிடம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News