செய்திகள் (Tamil News)

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர அ.ம.மு.க.வை ஆதரியுங்கள்- டி.டி.வி. தினகரன்

Published On 2018-06-07 04:03 GMT   |   Update On 2018-06-07 04:03 GMT
தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அ.ம.மு.க.வை ஆதரியுங்கள் என்று தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDinakaran
கரூர்:

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூர் வருகை தந்தார்.

முன்னதாக வரும் வழியில் தவுட்டுப்பாளையம், பஞ்சை புகளூர், வெங்கமேடு ஆகிய இடங்களில் அ.ம.மு.க. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினர் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவுட்டுப்பாளையத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் எதிர்க்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என்று உறுதியளிப்பவர்களே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. பி.ஆர்.பாண்டியன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை நடிகர் கமலஹாசன் சந்தித்ததை எதிர்த்துள்ளார். அது போல் நாங்களும் குமாரசாமியை சந்தித்ததை எதிர்க்கிறோம்.



தமிழகத்தில் இருப்பது மக்கள் விரோத ஆட்சி, அடிமைகளின் ஆட்சி, இந்த ஆட்சி எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்கலாம் என்று எண்ணுகிறது என்றார்.

கரூர் வெங்கமேடு பகுதியில் டி.டி.வி.தினகரன் பேசும் போது, கடந்த மாதம் கரூரில் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி என்னை அனுப்பி வைத்தீர்கள். இப்போது மீண்டும் கரூர் வந்துள்ளேன். தமிழகத்தில் மக்கள் விரும்பாத, துரோக ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அ.ம.மு.க.வை ஆதரியுங்கள் என்றார். #AMMK #TTVDinakaran
Tags:    

Similar News