செய்திகள் (Tamil News)

அரசு ஊழியர் காரை உடைத்து பணம்-செல்போன் திருட்டு- கடையம் வாலிபர் கைது

Published On 2018-07-04 08:02 GMT   |   Update On 2018-07-04 08:02 GMT
கடையம் அருகே அரசு ஊழியர் காரை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:

கயத்தாறை சேர்ந்தவர் சண்முகநாதன். அரசு ஊழியரான இவர் குற்றாலத்தில் குளிப்பதற்காக தனது காரில் சென்றார். இவர் கடையத்தில் உள்ள உறவினரை அழைத்துக் கொண்டு மற்றொரு வாகனத்தில் குற்றாலம் சென்றார். சண்முகநாதன் ஓட்டி வந்த காரை கடையத்தில் நிறுத்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் குற்றாலத்தில் குளித்துவிட்டு மீண்டும் கடையம் வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், ஒரு செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சண்முகநாதன் தனது செல்போனில் ஏ.டி.எம். ரகசிய எண்ணை பதிவு செய்து வைத்திருந்தார். இதைப்பார்த்து கொள்ளையன் திருடி சென்ற ஏ.டி.ஏம். கார்டில் இருந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்துள்ளான். உடனடியாக இது குறித்து சண்முகநாதன் கடையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாபு (வயது 21) என்பவர் தான், காரை உடைத்து செல்போன், பணத்தை திருடியதும், ஏ.டி.எம்.கார்டு மூலம் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை கைது செய்தனர் அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News