செய்திகள்
செங்கம் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் குறித்து விசாரணை
செங்கம் அருகே வங்கியில் ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு பின்பக்கமுள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நேற்று அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியின் ஜன்னல் கம்பிகளை மேலும் வளைக்க முடியாததால் வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.