உள்ளூர் செய்திகள்

கோவையில் விஷம் குடித்த தம்பதி; கணவர் பலி

Published On 2023-02-23 09:56 GMT   |   Update On 2023-02-23 09:56 GMT
  • மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார்

கோவை,

கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் விபின்(34). தனியார் நிறுவன ஊழியர்.

இவருக்கும், ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் விபின் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார். வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்தப் போகிறோம் என்ற மனவேதனையில் விபினும் அவரது மனைவியும் இருந்து வந்தனர்.

இதனால் வாழ்க்கையில் விரட்டியடைந்த விபின் மற்றும் அவரது மனைவி ரம்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று விபினும், அவரது மனைவி ரம்யாவும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தனர்.

அப்போது அங்கு வந்த விபினின் தாயார் 2 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்தார்.

பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கணவன்- மனைவி இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக இறந்தார். ரம்யாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

Similar News