திருவிடைமருதூர் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி
- அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் ஆண்டலாம்பேட்டை மற்றும் இளந்துறையில் பிளவர் மில் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி நீலாவுடன் (65) கடைவீதிக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.
திருவிடைமருதூர் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபைட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ், நீலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.
மேல் சிகிச்சைக்காக நீலாவை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவிடைமருதூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலாஜி (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.