இந்தியா (National)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

Published On 2024-01-13 04:12 GMT   |   Update On 2024-01-13 04:12 GMT
  • மூன்று முறை கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.
  • தனக்கு சம்மன் அனுப்பப்படுவது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி 3-வது முறையாக சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, கைது செய்யப்படலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை அவ்வாறு செய்யவில்லை.

இந்த நிலையில் தற்போது 4-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 18-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறையும் அவர் ஆஜராவாரா? என்பது தெரியவில்லை. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News